
கடந்த சில தினங்களாக கொழும்புவில் மழை பெய்து வருகிறது. ஆனால், நேற்று நடந்த இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது மழை குறுக்கீடு இல்லவே இல்லை. ஆனால், தற்போது நடந்து வரும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சூப்பர் 4 போட்டியின் போது பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக போட்டியானது நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சூப்பர் 4 சுற்றின் 3ஆவது போட்டி கொழும்புவில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி விளையாடி வருகிறது. இதில், ஷ்ரேயாஸ் ஐயர் முதுகுப்பிடிப்பு காரணமாக இடம் பெறவில்லை. கேஎல் ராகுல் இடம் பெற்றுள்ளார்.
ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், ஷாஹீன் அஃப்ரிடி வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில் ரோகித் சர்மா சிக்ஸர் அடித்து சாதனை படைத்தார். இதன் மூலமாக ஒருநாள் போட்டியில் ஷஹீனுக்கு எதிராக முதல் ஓவரிலேயே சிக்சர் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா பெற்றார்.
2ஆவது ஓவரை நசீம் ஷா வீசினார். இந்த ஓவரை சுப்மன் கில் எதிர்கொண்டார். முதல் பந்தில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஷாஹீன் அஃப்ரிடியால் பிடிக்க முடியவில்லை. இதே போன்று ஸ்லிப் பகுதியில் அடித்த வாய்ப்பையும் யாரும் பிடிக்கவில்லை. இப்படி சுப்மன் கில் கொடுத்த கேட்ச் வாய்ப்புகளை எல்லாம் பாகிஸ்தான் வீரர்கள் கோட்டைவிடவே அதிரடியாக மாறி மாறி பவுண்டரியாக அடித்தார்.
வெறும் 37 பந்துகளில் 10 பவுண்டரி அடித்த சுப்மன் கில் தனது 7ஆவது அரைசதத்தை பூர்த்தி செய்தார். ஷாஹீன் அஃப்டி ஓவரில் மட்டும் 6 பவுண்டரி அடித்துள்ளார். சுப்மன் கில் அரைசதம் அடித்ததைத் தொடர்ந்து ரோகித் சர்மாவும் ஒரு நாள் கிரிக்கெட்டில் தனது 50ஆவது அரைசதத்தை பூர்த்தி செய்துள்ளார். 240 இன்னிங்ஸில் விளையாடி ரோகித் சர்மா 50 அரைசதமும், 30 சதமும் அடித்துள்ளார்.
RSA vs AUS: சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடித்த டேவிட் வார்னர்!
இதில், தொடக்க வீரராக ரோகித் சர்மா 159 இன்னிங்ஸ் விளையாடி 28 சதமும், 37 அரைசதமும் அடித்துள்ளார். ஷதாப் கான் வீசிய ஓவரில் 6, 6, 4 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து சிக்ஸர் விளாசியுள்ளார். 42 பந்துகளில் 50 ரன்கள் எடுத்த ரோகித் சர்மா ஒரு நாள் போட்டிகளில் 10000 ரன்களை எடுக்கும் சாதனையை கோட்டைவிட்டுள்ளார்.
அவர், இந்தப் போட்டியில் 78 ரன்கள் எடுத்தால் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் 10000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைப்பார். ஆனால், அவர் 49 பந்துகளில் 6 பவுண்டரி 4 சிக்ஸர்கள் உள்பட 56 ரன்கள் எடுத்து 22 ரன்களில் 10000 ரன்கள் எடுக்கும் சாதனையை கோட்டைவிட்டுள்ளார்.
சுப்மன் கில் 52 பந்துகளில் 10 பவுண்டரி உடன் 58 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் இருவரும் களமிறங்கி விளையாடி வருகின்றனர். தற்போது வரையில் இந்திய அணி 24.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. இந்த நிலையில் தான் சிறிது நேரத்திற்கு முன்பாக வெயில் வாட்டி வதைத்த நிலையில், திடீரென்று பலத்த காற்றுடன் கனமழை பெய்யத் தொடங்கியது. இதன் காரணமாக போட்டியானது நிறுத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியின் போது மழை குறுக்கிட்டது. ஆனால், அந்தப் போட்டி ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் ஒரு புள்ளிகள் வீதம் பகிர்ந்து அளிக்கப்பட்டது. ஆனால், இன்றைய போட்டியானது மழையால் ரத்து செய்யப்பட்டால் நாளை மீண்டும் தொடங்கப்படும். ஏனென்றால், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியானது மழையால் பாதிக்கப்பட்டால் ரிசர்வ் டே என்று சொல்லப்படும் அடுத்த நாள் போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.