மகளிர் கிரிக்கெட்டில் இந்தியாவிற்கு எதிரான 3வது டி20 போட்டியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது.
ஆஸ்திரேலிய மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. மும்பை டிஒய் பாட்டீல் மைதானத்தில் இந்த தொடர் நடந்துவருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும், 2வது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றதால் 1-1 என தொடர் சமனில் இருந்த நிலையில், 3வது போட்டி இன்று நடந்தது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
இந்திய மகளிர் அணி:
ஷஃபாலி வெர்மா, ஸ்மிரிதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கௌர் (கேப்டன்), தேவிகா வைத்யா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), தீப்தி ஷர்மா, ராதா யாதவ், அஞ்சலி சர்வானி, ரேணுகா தாகூர் சிங், ராஜேஷ்வரி கெய்க்வாட்.
ஆஸ்திரேலிய மகளிர் அணி:
பெத் மூனி, அலைசா ஹீலி (கேப்டன், விக்கெட் கீப்பர்), தாலியா மெக்ராத், ஆஷ்லே கார்ட்னெர், எலைஸ் பெர்ரி, கிரேஸ் ஹாரிஸ், அனாபெல் சதெர்லேண்ட், நிகோலா கேரி, அலானா கிங், மேகன் ஸ்கட், டார்சி ப்ரௌன்.
முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய மகளிர் அணியின் தொடக்க வீராங்கனையும் கேப்டனுமான அலைஸா ஹீலி ஒரு ரன்னில ஆட்டமிழந்தார். முதல் 2 போட்டிகளிலும் 80 ரன்களுக்கும் அதிகமாக குவித்த பெத் மூனியை இந்த போட்டியில் இந்த போட்டியில் 30 ரன்களுக்கு வீழ்த்தினார் தேவிகா வைத்யா.
அதன்பின்னர் மெக்ராத்(1), கார்ட்னெர்(7) ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினாலும், எலைஸா பெர்ரி அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். அபாரமாக பேட்டிங் ஆடி 47 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 75 ரன்களை குவித்தார். கிரேஸ் ஹாரிஸ் அதிரடியாக ஆடி 18 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 41 ரன்களை விளாச, 20 ஓவரில் 172 ரன்களை குவித்த ஆஸ்திரேலிய மகளிர் அணி, 173 ரன்கள் என்ற சவாலான இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்தது.
173 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய மகளிர் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா 10 பந்தில் ஒரு ரன் மட்டுமே அடித்து ஏமாற்றமளித்தார். கடந்த போட்டியில் மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் ஆடிய ஸ்மிரிதி மந்தனா, இந்த போட்டியில் ஒரு ரன் மட்டுமே அடித்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீராங்கனையான ஷஃபாலி வெர்மா சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். ஆனால் அவர் 52 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அதன்பின்னர் தேவிகா வைத்யா மற்றும் ரிச்சா கோஷ் ஆகிய இருவரும் ஒரு ரன்னுக்கு நடையை கட்டினர். அதிரடியாக ஆடி இந்திய அணிக்கு நம்பிக்கையளித்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் 27 பந்தில் 37 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். பின்வரிசையில் தீப்தி ஷர்மா 17 பந்தில் 25 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்கவில்லை. ஆனாலும் இந்திய அணியால் 20 ஓவரில் 151 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. 21 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி 2-1 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.