ஒரு தேசத்தின் தரத்தை அளவீடு செய்ய உதவும் காரணிகளில் ஒன்று அதன் கல்வித்துறை. அதிலும் உயர்கல்வித்துறையின் பங்கு அலாதியானது. இந்தியாவில் உயர்கல்வித்துறை சர்வதேச அளவில் கவன்ம் ஈர்ப்பதாக இருந்த காரணத்தில்தான் கடல் கடந்தும், கண்டம் தாண்டியும் வந்து பல நாட்டு இளைஞர்கள் இங்கே மாணவர்களாகி இருக்கிறார்கள். இந்திய உயர்கல்வி துறையில் தவிர்க்க முடியாத அங்கம் பெற்றிருந்தது தமிழக உயர்கல்வித்துறை. ஆனால் கடந்த சில மாதங்களாக இந்த துறையின் மீது வீசப்படும் சர்ச்சை சாணியால் ஊதாரித்துறை என பெயர் பெற்றுவிட்டது உயர்கல்வித்துறை.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியின் பேராசிரியை நிர்மலாவின் ‘தொழிலுக்கு வர்றீயா?’ எனும் ரீதியிலான பேச்சு, கல்லூரிக்குப் பெண்ணை அனுப்பும் பெற்றோர்களின் அடிமடியில் அரை டன் ஆர்.டி.எக்ஸை வைத்துள்ளது. ’நிம்மி லீக்ஸ்’ என்று மீடியாக்கள் போட்டுப் பொளந்து கட்டும் வகையில் சிரிப்பாய் சிரிப்பிற்கு உள்ளாகி இருக்கிறது. இந்த விவகாரத்தில் பாய்ந்து கொண்டு தமிழக கவர்னர் விசாரணை கமிஷன் அமைத்ததும், முருகன் மற்றும் கருப்பசாமி என்று அடுத்தடுத்து நபர்கள் சி.பி.சி.ஐ.டி.யால் வளைக்கப்படுவதும், மதுரை காமராஜர் பல்கலையின் ஒட்டுமொத்த அமைப்புமே ’பெண்’ விவகாரத்தில் கொக்கி போடப்பட்டு விமர்சிக்கப்படுவதும் அகில இந்திய அளவில் அசிங்கப்படவைத்துள்ளது.
நிம்மி லீக்ஸ் மட்டுமில்லை, மேற்கு தமிழகத்தை சேர்ந்த ஒரு கல்லூரியின் இளம் பேராசிரியை ஒரு நபருடன் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டது மட்டுமில்லாமல் அதை டிஜிட்டல் தரத்தில் வீடியோவும் எடுத்துள்ள வக்கிரமும் இப்போது வெளிப்பட்டுள்ளது. ஏன் இப்படியொரு வீடியோவை அந்த பேராசிரியை எடுத்தார்? தனியார் கல்வித்துறையில் உயர் பொறுப்பிலுள்ல அந்த நபரை வைத்து அவர் சாதித்த காரியங்கள் என்ன? இந்த பேராசிரியை தனது மாணவிகள் யாரையும் இப்படி பயன்படுத்தினாரா? என்று ஆயிரத்தெட்டு கேள்விகள் குவிய துவங்கியுள்ளன.
இது போதாதென்று கோயமுத்தூர் பாரதியார் பல்கலையில் துணைவேந்தரே, பேராசிரியர் பணி நியமனத்துக்காக லட்சங்களை லஞ்சமாக தன் வீட்டில் பெற்று, கையும் களவுமாக சிக்கி சிறை சென்றது ஆகப்பெரிய கேடு. அதே கல்லூரியை சேர்ந்த தமிழ்துறை தலைவர் இப்போது லஞ்சம் வாங்கியதாக வீடியோவில் சிக்கியிருப்பது அதிர்ச்சியின் உச்சம். இதே பல்கலையை சேர்ந்த ஆங்கிலத்துறை பேராசியரின் மீது ஆராய்ச்சி மாணவி ஒருவர் ‘என்னை படுக்கைக்கு அழைக்கிறார்’ என்று புகார் வீசியபோது அப்பல்கலையின் முன்புறமிருந்த பாரதியாரின் சிலையே தலையை குனிந்து கொண்டது.
இது போதாதென்று சேலம் பெரியார் பல்கலையிலும் நிதி முறைகேடு தொடர்பாக விசாரணைகள் நடந்து வருகின்றன. திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையிலும் ஏக சர்ச்சை விமர்சனங்கள்.இப்படி தமிழத்தின் உயர்கல்வித்துறையின் மானத்தை அந்த துறையை சேர்ந்த நிர்வாகிகளை கதற கதற சூறையாடுவது தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது இப்போது உச்சம் பெற்றிருக்கிறது.
இதுவரையில் ‘நியமனத்துக்கு லஞ்சம் கேட்டார்’, ‘பாச் பண்ணிவிட படுக்கைக்கு அழைத்தார்’ என்ற ரீதியில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் சில புகார்கள் வெடித்துக் கொண்டிருந்தன. ஆனால் நிர்மலாதேவியின் ‘நிம்மி லீக்ஸ்’ மூலம் படிக்கும் மாணவிகளை....வேறு ஒரு வகையிலான பெண்களாக்குவதென்பது நாராசத்தின் உச்சம்.தமிழக உயர்கல்வித்துறை இப்படி அசிங்கப்பட்டு சீரழிந்து கொண்டிருக்கும் நிலையில் அந்த துறையின் அமைச்சர் அன்பழகன், அதை நிர்வகிக்கும் தார்மீக ஆதரவை எப்போதோ இழந்துவிட்டார்.
எந்த பல்கலையும் அவரது கட்டுப்பாட்டில் இல்லை என்பது புலனாகிறது. நிர்மலா விவகாரம் வெடித்ததும், இவர் தலையிடுவதற்கு முன்பாகவே கவர்னரே விசாரணை கமிஷன் அமைக்கிறார். அப்படியானால் அமைச்சரின் ஆளுமை மீது கவர்னருக்கு நம்பிக்கை இல்லை என்றுதானே அர்த்தம்.
அந்த மந்திரிக்கு மனசாட்சி என்று ஒன்றிருந்தால் இன்றே பதவியை விட்டு விலகலாம்!