மகாத்மா காந்தி கொலை வழக்கை மறு விசாரணை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
இந்த வழக்கில் உதவுவதற்காக நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்(அமிகஸ்கியூரி) அமரேந்தர் சரண், சில ஆவணங்களைத் தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டதால் உச்ச நீதிமன்றம் 4 வாரங்கள் ஒத்திவைத்தது.
மனுத்தாக்கல்
மகாத்மா காந்தி கொலையை மறுவிசாரணை செய்யக்கோரி பங்கஜ் பட்னிஸ் என்ற வரலாற்று ஆய்வாளர் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 6-ந் தேதி மனுத்தாக்கல் செய்து இருந்தார்.
மறுவிசாரணை
மாகாத்மா காந்தி கடந்த 1948ம் ஆண்டு ஜனவரி 30-ந்தேதி நாதூராம் கோட்சே என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலையில் கோட்சேவின் துப்பாக்கியில் இருந்து 3 தோட்டக்கள் மட்டுமே வெடித்ததாக போலீஸ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், மற்ற வேறு சில ஆவணங்களில் 4 தோட்டாக்கள் சுடப்பட்டதாக மனுதாராரர் பட்னிஸ் தனது மனுவில் தெரிவித்துள்ளார். ஆதலால், வழக்கை மீண்டும் மறு விசாரணை செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.
அவசியம் என்ன?
இந்த மனு நீதிபதி எஸ்.ஏ.பாப்டே முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது காந்தியின் பேரன் துஷார் காந்தி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், இந்த வழக்க மீண்டும் விசாரணை செய்வதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். 70 ஆண்டுகளுக்கு பின் இந்த வழக்க மீண்டும் விசாரிக்க முடியாது. அதற்கான அவசியம் இப்போது என்ன வந்துவிட்டது? இது அடிப்படைக் குற்றச் சட்டம் என்று வாதிட்டார்.
4 வாரங்கள்
இந்த வழக்கில் உதவுவதற்காக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அமரேந்தர் சரணை நீதிமன்றம் நியமித்துள்ளது. இந்த வழக்கில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய கால அவகாசம் தேவை என அமரேந்தர் சரண் கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து, இந்த மனு மீதான விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்து நீதிபதிபாப்டே உத்தரவிட்டார்.