யார் இந்த கிஷோரி லால் சர்மா? இவருக்கு ஏன் சோனியா காந்தி முக்கியத்துவம் கொடுக்கிறார்?

By Dhanalakshmi GFirst Published May 3, 2024, 11:07 AM IST
Highlights

அமேதி தொகுதியில் ராகுல் காந்தியா? பிரியங்கா காந்தியா? என்ற கேள்வி எழுந்து வந்த நிலையில் இதற்கு காங்கிரஸ் கட்சி இன்று முற்றுப் புள்ளி வைத்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் அமேதி, ரேபரேலி மக்களவை தொகுதிகள் என்றும் ஸ்டார் தொகுதிகளாக பார்க்கப்படுகின்றன. இதற்குக் காரணம் இந்த இரண்டு தொகுதிகளும் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மற்றும் இவரது வாரிசுகள் மட்டுமே காங்கிரசில் இருந்து போட்டியிடும் களமாக  பார்க்கப்படுகிறது.

சஞ்சய் காந்தி, ராஜீவ் காந்தி:
அமேதி தொகுதியில் இந்திரா காந்தியின் மகன்களான சஞ்சய் காந்தி, மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி போட்டியிட்ட ஸ்டார் தொகுதிகளாக பார்க்கப்படுகிறது. 2019 வரை காங்கிரஸ் கட்சி தான் இந்த தொகுதியில் வெற்றி பெற்று வந்தது. ஆனால், 1977, 1998 ஆகிய தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது. இதற்குக் காரணம் இந்திரா காந்தி எமர்ஜென்சியை அறிவித்ததற்குப் பின்னர் நடந்த தேர்தல் மற்றும் 1998ல் நடந்த தேர்தலில் பாஜகவைச் சேர்ந்த சதிஷ் சர்மா, காங்கிரஸ் கட்சியின் சதிஷ் சர்மாவை தோற்கடித்து இருந்தார். 1980ஆம் ஆண்டில் சஞ்சய் காந்தி, 1981,1984, 1989, 1991 ஆகிய ஆண்டுகளில் ராஜீவ் காந்தி, 1999ல் சோனியா காந்தி, 2004, 2009, 2014 ஆம் ஆண்டுகளில் ராகுல் காந்தி போட்டியிட்டு இருந்தனர். 2019ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானியிடம் ராகுல் காந்தி தோற்று இருந்தார். அந்த ஆண்டில் வயநாடு தொகுதியிலும் இறுதிக் கட்டத்தில் வேட்புமனு தாக்கல் செய்திருந்த ராகுல் காந்தி அங்கு வெற்றி பெற்றார்.

Latest Videos

அமேதியில் இருந்து விலகிய காந்தி குடும்பம்.. ரேபரேலியில் போட்டியிடுகிறார் ராகுல்காந்தி..

இந்த நிலையில்தான் தற்போதைய தேர்தலிலும் வயநாடு தொகுதியைத் தொடர்ந்து, அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடுவார் என்று பேசப்பட்டது. ஆனால், தற்போது அமேதி தொகுதியில் காந்தி குடும்பத்துக்கு நெருக்கமான கிஷோரி லால் சர்மா போட்டியிடுவார் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. ராகுல் காந்தி இரண்டாவது தொகுதியாக ரேபரேலியில் போட்டியிடுகிறார்.

யார் இந்த கிஷோரி லால் சர்மா?

அமேதி தொகுதியில் ஸ்ம்ருதி இரானியை கிஷோரி லால் சர்மா எதிர்கொள்கிறார். இந்த தொகுதியில் வரும் மே 20ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. 

* காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு விசுவாசமானவர் கிஷோரி லால் சர்மா. ரேபரேலியில் சோனியா காந்தி வெற்றி பெற்று இருந்தபோது, அவரது பிரதிநிதியாக அந்த தொகுதியில் வலம் வந்தவர்.

* அமேதி மற்றும் ரேபரேலி தொகுதியை நீண்ட நாட்கள் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்காணித்து, பணியாற்றி வந்தவர். காங்கிரஸ் தலைமை இந்த இரண்டு தொகுதிகளிலும் எப்போதும் உயிர்ப்புடன் இருப்பதாக பார்த்துக் கொண்டார். 

* பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்தவர் கிஷோரி லால் சர்மா. இவரை 1983ஆம் ஆண்டில் அமேதி தொகுதிக்கு அறிமுகம் செய்து வைத்தார் ராஜீவ் காந்தி.

* ராஜீவ் காந்தியின் அகால மரணத்துக்குப் பின்னர் இந்த தொகுதியில் போட்டியிடுவதை காந்தி குடும்பம் நிறுத்திக் கொண்டது. ஆனாலும், இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்காக தொடர்ந்து பாடுபட்டு வந்தவர் கிஷோரி லால் சர்மா.

* இதையடுத்து, 1999ல் அமேதியில் சோனியா காந்தி போட்டியிட்டபோது, கடினமாக உழைத்து வெற்றி தேடி தந்தவர் கிஷோரி லால் சர்மா. இதனால் தான், முதன் முறையாக மக்களவைக்குள் சோனியா காந்தியால் செல்ல முடிந்தது.
 
* இது மட்டுமின்றி காங்கிரஸ் கட்சிக்காக பீகார், பஞ்சாப் மாநிலங்களிலும் கிஷோரி லால் சர்மா பணியாற்றி வருகிறார். இவரை கட்சி தலைமை நம்பிக்கைக்குரியவர்களின் பட்டியலில் உன்னதமான இடத்தில் வைத்துள்ளது. அதற்கு பரிகாரமாக தற்போது அமேதி தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பையும் அளித்துள்ளது.

click me!