யார் இந்த அமரிந்தர் சிங்? தெரிந்து கொள்ளுங்கள்….

First Published Mar 16, 2017, 4:48 PM IST
Highlights
This amarintar Singh who? Learn


பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சி தலைவரான அமரிந்தர் சிங், அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். கடந்த 1942-ம் ஆண்டு, மார்ச் 11-ந் தேதி மஹாராஜா யாதவேந்திர சிங், மஹாரானி மொகிந்தர் கவுர் தம்பதிக்கு பாட்டியாலா நகரில் பிறந்தார் அமரிந்தர் சிங்.

டேராடூனில் உள்ள லாரன்ஸ் பள்ளியிலும், அதன்பின் சனாவர் மற்றும் டூன் பள்ளியிலும் அமரிந்தர் சிங் படித்தார். காரக்வாசலாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாதெமியில் கடந்த 1959ம் ஆண்டு சேர்ந்து, படித்து, 1963-ல் பட்டம் பெற்றார்.

அதன்பின், 1963-ல் ராணுவத்தில் சேர்ந்த அமரிந்தர் சிங்குக்கு அவரது தந்தையும், தாத்தாவும் பணியாற்றிய சீக்கிய ரெஜிமென்ட்டில், இந்திய-திபெத்திய எல்லையில் பணி ஒதுக்கப்பட்டது.

குறுகிய காலமே ராணுவத்தில் இருந்த அமரிந்தர் சிங் 1965-ல் ராஜினாமா செய்தார். 1966-ல் இந்திய-பாகிஸ்தான் போர் ஏற்பட்டபோது அமரிந்தர் சிங் மீண்டும் ராணுவப் பணிக்கு திரும்பி, போர் முடியும் வரை பணியாற்றினார்.

அவரின் அரசியல் வாழ்க்கை கடந்த 1980ம் ஆண்டு ஜனவரியில் தொடங்கியது. காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த அமரிந்தர் சிங் மக்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.

ஆனால், 1984-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் ஆணைப்படி பொற்கோயிலுக்குள் ராணுவம் நடத்திய ‘புளூஸ்டார் ஆப்ரேஷன்’ நடவடிக்ைகக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அதன்பின், அகாலிதளம் கட்சியில் 1985-ல் சேர்ந்து, தேர்தலில் போட்டியிட்டு அமரிந்தர் சிங் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டார். சுர்ஜித் சிங் பர்னாலா அரசில் வேளாண் அமைச்சராகவும் அமரிந்தர் சிங் இருந்தார்.

அதன்பின், 1986ம் ஆண்டு, மே 5-ந்தேதி பொற் கோயிலுக்குள் துணை ராணுவப் படையினர் நுழைவதற்கு பர்னாலா அரசு ஆணையிட்டதை எதிர்த்து தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

`பாந்திக் அகாலி தளம்' என்ற கட்சியைத் தொடங்கிய அமரிந்தர் சிங், பின் 1997ம் ஆண்டு அதை காங்கிரஸ் கட்சியோடு இணைத்தார். 1998ல் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு அமரிந்தர் தோல்வி கண்டார்.

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக 1999-2002 வரையிலும், 2002 முதல் 2007ம் ஆண்டு வரை முதல்வராகவும் அமரிந்தர் சிங் இருந்தார். நிலம் பரிமாற்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, 2008ம் ஆண்டு மாநில சட்டப்பேரவைக் குழுவில் இருந்து அமரிந்தர் நீக்கப்பட்டு, அதன்பின் அந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இவரை விடுவித்ததையடுத்து, மீண்டும் காங்கிரஸ் தலைவரானார்.

கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜனதா தலைவர் அருண் ஜெட்லியை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அமரிந்தர் வென்றார். சட்லஜ் யமுனா கால்வாய் இணைப்பு திட்டத்தை ரத்து செய்தது செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததை எதிர்த்து, கடந்த நவம்பரில் அவர் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.

click me!