ஆசைக்கு இணங்காத மருமகளை கத்தியால் வெட்டிய மாமனார், காவல்துறைக்கு பயந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் சாரு மாவட்டத்தைச் சேர்ந்த 50 வயதான நபர் ஒருவர், மகனுக்கு திருமணம் செய்து வைத்ததுடன், அவரை தன் வீட்டிலேயே தங்க வைத்துள்ளார். மகன் வீட்டில் இல்லாத நேரங்களில் மருமகளை தனது ஆசை வலையில் வீழ்த்த அவர் துடித்துள்ளார். இரட்டை அர்த்த பேச்சுகள், உரசல்கள் எனத் தொடர்ந்த மாமனாரின் லீலைகளால் ஆத்திரமடைந்த இளம்பெண், அவருடன் பேசுவதை தவிர்த்துள்ளார்.
ஆனாலும், விடாது கருப்பு போல மாமனார் தொடர்ந்து, மறைமுகமாக இளம்பெண்ணுக்கு தொல்லை கொடுத்ததால், கணவனிடம் வேறு சில காரணங்களைக் கூறி, மருமகள் தனிக்குடித்தனம் சென்றுவிட்டார். மருமகள் தனிக்குடித்தனம் சென்றுவிட்டாலும், அவரை எப்படியாவது அடைந்துவிட வேண்டும் என்ற முடிவுடன் இருந்த மாமனார், அடிக்கடி மகன் வீட்டுக்கு வருவதை வழக்கமாக வைத்திருந்தார். இதனிடையே மகனுக்கு 2 குழந்தைகள் பிறந்து, அவர்கள் பள்ளிக்கு சென்றாலும், மருமகளை அடைய வேண்டும் என்ற ஆசையை மாமனார் கட்டுப்படுத்தவில்லை.
இந்நிலையில், கடந்த வாரம் அலுவலக வேலை விசயமாக தலைநகர் ஜெய்ப்பூருக்கு மகன் சென்றுவிட்டதை அறிந்த அவர், மருமகளை சந்திக்கும் நோக்குடன் அங்கு சென்றுள்ளார். அங்கு பேரப்பிள்ளைகள் இல்லாததை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அவர், மருமகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். ஆனால், அவரது ஆசைக்கு மருமகள் இணங்காததால் ஆத்திரமடைந்த மாமனார், தான் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து, மருமகளின் தலை, கழுத்து, கை, கால் என பல இடங்களிலும் வெட்டினார்.
வலியால் அந்த பெண் கதறியதை கண்ட அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்ததுடன், காவல்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து, மருத்துவமனைக்குச் சென்று அவரது வாக்குமூலத்தை பதிவு செய்த காவல்துறையினர், பின்னர் அவரது வீட்டுக்கு வந்துள்ளனர். அதற்குள் அங்கிருந்து தப்பிச் சென்ற மாமனார், காவல்துறையினரின் விசாரணைக்கு பயந்து, தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.