மும்பை விபசார விடுதி ஒன்றில் போலீசார் திடீர் என ரெய்டு வந்ததால் அவர்களிடம் இருந்து தப்பிக்க அங்கிருந்த 2 பெண்கள் மூன்றாவது மாடியில் இருந்து குதித்ததில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மும்பை கிராண்ட் ரோடு பகுதியில் உள்ள ஒரு மதுபான பாரில் விபசாரம் நடந்து வருவதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று இரவு 10.30 க்கு போலீசார் அங்கு ரெய்டுக்கு சென்றனர்.
பாரின் கீழ் தளத்தில் போலீசார் சோதனை நடத்துவதை அறிந்த விபசார பெண்கள் மேல் மாடிக்கு தப்பிச் சென்றனர். ஆனாலும் போலீசார் அவர்கனை விடாமல் துரத்தினர்.
அப்போது போலீசாரின் பிடியில் சிக்கி விடக்கூடாது என்பதற்காக பாரின் 3-வது மாடியின் ஜன்னல் வழியாக 2 விபசார பெண்கள் கயிறு கட்டி கீழே இறங்க முயன்றனர். அவ்வாறு மாடியில் இருந்து இறங்கியபோது 2 பெண்களும் தவறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
போலீசுக்கு பயந்து தப்பிக்க நினைத்து உயிரிழந்த 2 விபசார பெண்களும் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது. அவர்களில் ஒருவருக்கு 30 வயதும், மற்றொருவருக்கு 50 வயதும் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.