இரும்பு குழாய் திருடியதாக கூறி 14 வயது சிறுவன் ஒருவனை தலைகீழாக தொங்க விட்டு அடித்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம், பிரோசாபாத்தில் இரும்பு குழாய்களை சேமித்து வைக்கும் கிடங்கு ஒன்று உள்ளது. இந்த கிடங்கின் உரிமையாளர், இரும்பு குழாய்களை திருடி சென்றதாக 14 வயது சிறுவன் மீது போலீசில் புகார் கூறினார்.
கிடங்கின் உரிமையாளர் புகாருக்கு ஆதாரம் இல்லை என்று போலீசார் சிறுவன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதை அடுத்து அவர், சிறுவனை தனது இரும்பு குழாய் கிடங்குக்கு அழைத்துச் சென்றார். பின்னர், சிறுவனை நிர்வாணமாக்கி, தலைகீழாக கட்டி தொங்கவிட்டு
அடித்து உதைத்துள்ளார்.
சிறுவனை கொடூரமாக தாக்கும் முதலாளியின் செயலைப் பார்த்த மற்ற தொழிலாளர்கள் மனம் நொந்து போனார்கள். பின்னர், சிறுவனை அடிக்கும் காட்சியை செல்போனில் வீடியோ எடுத்து, அதை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். சிறுவன் சித்தரவதை செய்யப்படும் காட்சி சமூக வலைத்தளங்களில் வெகுவாக பரவியது.
அந்த வீடியோ காட்சியை வைத்து இரும்பு குழாய் கிடங்கின் உரிமையாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.