கடந்த நவம்பர் மாதம் 8ம் தேதி பிரதமர் மோடி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இதை தொடர்ந்து மக்கள், கையில் இருப்பு உள்ள பணத்தை வங்கியில் செலுத்தி, மாற்றி கொள்ளலாம் என தெரிவித்தார்.
ஆனால், தினமும் அதிகாலை முதல் இரவு வரை பொதுமக்கள் வங்கிகள், ஏடிஎம் மையங்களில் கால் கடுக்க காத்திருந்து, கடும் அவதியடைகின்றனர். ஆனால், அதில் சிலருக்கு மட்டுமே பணம் கிடைக்கிறது. மற்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வது வாடிக்கையாக உள்ளது.
தினமும் பஸ் மூலம் வேலைக்கு சென்று வரும் மக்கள், மாத சம்பளத்தை எடுக்கவே நாள் முழுவதும் வங்கியின் முன் காத்திருக்கும் நிலை உள்ளது. தற்போது பல வங்கிகளில் 2000, 100 ரூபாய் நோட்டுகள் இல்லததால், 10 ரூபாய் நாணயங்களை கவரில் போட்டு பொதுமக்களுக்கு கொடுத்துவிடுகின்றனர்.
இந்நிலையில் 10 ரூபாய் நாணயம் செல்லாது என திடீர் வதந்தி ஆரம்பித்துள்ளது. இன்சூரன்ஸ் நிறுவனங்கள், பொதுத்துறை வங்கிகள், பெட்ரோல் பங்க்குகள் உட்பட அரசு சார்ந்த நிறுவனங்களே வாங்க மறுத்துள்ளதாக பலர் புகார் கூறுகின்றனர்.
டீக்கடை, பெட்டிக்கடைகள், காய்கறி கடைகள், மளிகை கடைகள், தெருவோர வியாபாரிகள் என பல கடைகளில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கிறார்கள். இவ்வளவு ஏன் அரசு பஸ்சிலேயே கண்டக்டர்கள் வாங்க மறுக்கிறார்கள்.
10 ரூபாய் நாணயத்தில் போலி தயாரிக்கப்பட்டுள்ளதாக சமூக வளைதளங்களில், பத்திரிகைகளில் செய்தி உலா வருவதாக கூறுகின்றனர். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது போல் 10 ரூபாய் நாணயம் செல்லாது என்று கூறிவிட்டால் என்ன செய்வது?
கனமான சில்லறையை தூக்கிக்கொண்டு அலையமுடியாதே என கூறுகின்றனர்.
ரிசர்வ் வங்கியே அறிவிக்காத நிலையில், பெரும்பாலான இடங்களில் 10 ரூபாய் நாணயம் செல்லாது என வாங்க மறுப்பது எந்த வகையில் நியாயம் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.