பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ சர்ச்சை: அறிக்கை கேட்கும் தேசிய மகளிர் ஆணையம்!

By Manikanda PrabuFirst Published Apr 30, 2024, 1:51 PM IST
Highlights

பாஜக கூட்டணி கட்சியான மதசார்பற்ர ஜனதாதள எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ சர்ச்சை தொடர்பாக அம்மாநில டிஜிபியிடம் தேசிய மகளிர் ஆணையம் அறிக்கை கோரியுள்ளது

முன்னாள் பிரதமருன், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சித் தலைவருமான தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா. தேவகவுடாவின் மகனான ஹெச்.டி.ரேவண்ணாவின் மகன்தான் இந்த பிரஜ்வல் ரேவண்ணா. கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி எம்.பி.யாக இருக்கும் பிரஜ்வல் ரேவண்ணா, 2024 மக்களவைத் தொகுதியில் மீண்டும் ஹாசன் தொகுதியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி வேட்பாளராக போட்டியிடுகிறார்.

இதனிடையே, முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் தொகுதி எம்.பியுமான பிரஜ்வல் ரேவண்ணா தொடர்புடைய ஆயிரக்கணக்கான ஆபாச வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் லீலைகள் அடங்கிய 2976 வீடியோக்கள் கர்நாடக மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவரது பாலியல் துன்புறுத்தல்களில் அரசு அதிகாரிகள் முதல் சாமானியர்கள் வரை பல்வேறு பெண்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

அதேசமயம், பிரஜ்வல் ரேவண்ணா உல்லாசமாக இருக்கும் ஆபாச வீடியோவில் உள்ள பெண் ஒருவர், கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை தனக்கு பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். அதன் அடிப்படையில் ஹாசன் மாவட்ட காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோக்கள் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு அம்மாநில காங்கிரஸ் அரசு உத்தரவிட்டுள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்க விளைவுகள்: தயாரிப்பு நிறுவனம் பகீர் தகவல்!

இதனிடையே, பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாடு தப்பி சென்று விட்டார். அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநிலம் முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிக்குள்ளேயே எதிர்ப்புகள் வலுத்துள்ளன. பெண்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகங்கள் குறித்து பேசும் பாஜக, பாலியல் சர்ச்சையில் சிக்கியுள்ள ஒருவருக்கு எப்படி தங்களது கூட்டணியில் வாய்ப்பளித்தது என கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்த வீடியோக்கள் தொடர்பாக கர்நாடக மாநில பாஜக நிர்வாகி டெல்லி தலைமையை முன்னரே எச்சரித்த கடிதமும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், பாஜக கூட்டணி கட்சியான மதசார்பற்ர ஜனதாதள எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ சர்ச்சை தொடர்பாக அம்மாநில டிஜிபியிடம் தேசிய மகளிர் ஆணையம் அறிக்கை கோரியுள்ளது.

இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ள தேசிய மகளிர் ஆணையம், இந்தச் சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதாகவும், வெளிநாடு தப்பி சென்றவரை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியதுடன், இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை மூன்று நாட்களுக்குள் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கர்நாடக மாநில டிஜிபி எழுதியுள்ள கடிதத்தில் தேசிய  மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

click me!