சாமியார் பாபா ராம்தேவுக்கு பயங்கர அதிர்ச்சி…பதஞ்சலியின் 40 சதவீத பொருட்கள் தரமில்லாதவை…நெல்லிக்காய் ஜூஸை ராணுவ கேண்டீனே ஒதுக்கித் தள்ளிய அவலம்….
சாமியார் பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத பொருட்களில் 40 சதவீதம் தரமில்லாதவை என்று உத்தரகாண்ட் மாநில அரசின் உணவுப் பொருட்கள் தரச் சோதனை ஆய்வகம் தெரிவித்துள்ளதாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் தெரியவந்துள்ளது.
கடந்த 2013ம் ஆண்டில் இருந்து 2016ம் ஆண்டுவரை பதஞ்சலி நிறுவனத்திடம் இருந்து 82 பொருட்களின் மாதிரிகள் எடுத்து தரச்சோதனை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில் பதஞ்சலி நெல்லிக்காய் ஜூஸ், சிவலிங்கி பீஜ் உள்ளிட்ட பல பொருட்கள் தரமற்றவை எனத் தெரியவந்துள்ளது.
கடந்த மாதம் பதஞ்சலி நெல்லிக்காய் ஜூஸ் தரத்தில் மிகவும் மோசமாக இருந்து என்று மேற்கு வங்காள சுகாதார ஆய்வகத்தில் சோதனை செய்யப்பட்டபோது தெரியவந்தது. இதையடுத்து ராணுவத்தினருக்கான கேண்டீன் நிறுவனமும் பதஞ்சலியின் நெல்லிக்காய் ஜூஸ் கொள்முதலுக்கு தடை விதித்தது.
உத்தரப்பிரதேச அரசு பொது சுகாதார, உணவுப்பொருட்கள் ஆய்வகத்தின் அறிக்கையின் படி, “ நெல்லிக்காய் ஜூஸில் பி.எச். மதிப்பு என்பது, நிர்ணயிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் குறைவாக இருந்துள்ளது. அதாவது 7 சதவீதத்துக்கு குறைவாக பி.எச் மதிப்பு இருக்கும் பட்சத்தில் மனிதர்களுக்கு வயிறு தொடர்பான பிரச்சினைகளை உள்ளிட்ட கோளாறுகளையும் ஏற்படுத்தும்.
மேலும், சிவலிங்கி பீஜ் எனும் பொருளில் 31.68 சதவீதம் வெளிநாட்டு பொருட்கள் கலந்து இருப்பது தெரியவந்துள்ளது’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த ஆய்வகத்தின் அறிக்கையை பதஞ்சலியின் மேலாளர் இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா மறுத்துள்ளார். அவர் கூறுகையில், “ சிவலிங்கி பீஜ் என்பது, இயற்கையான ஒரு விதை. இதில் எப்படி நாங்கள் கலப்படம் செய்ய முடியும். இது பதஞ்சலி நிறுவனத்துக்கு அவப்பெயர் உண்டாக்கும் முயற்சி’’ எனத் தெரிவித்துள்ளார்.
இது தவிர, பதஞ்சலியின் ஆயுர்வேத பொருட்களான அவிபட்டிகரா சூரணா, தலிஸ்தயா சூரணா, புஷ்யநுகா சூரணா, லவன பாஷ்கர் சூரணா, யோகராஜ் குக்குலு, லக்ஷா குக்லு ஆகியவையும் தரமில்லாதவை எனத் தெரியவந்துள்ளது.