சீனாவை அடுத்து இந்தியாவை சீண்டும் நேபாளம்!

By Manikanda PrabuFirst Published May 5, 2024, 2:38 PM IST
Highlights

இந்திய பகுதிகளை உள்ளடக்கிய வரைபடத்துடன் புதிய ரூபாய் நோட்டை அண்டை நாடான நேபாளம் வெளியிடவுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

நமது அண்டை நாடான சீனா, நேபாளம் ஆகிய நாடுகளுக்கும் நமக்கும்  இடையே எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது. இந்தியாவின் சில பகுதிகளை இரு நாடுகளும் சொந்தம் கொண்டாடி வருகின்றன.

அந்த வகையில், வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. அருணாச்சலப் பிரதேசத்தை தெற்கு திபெத் என்று உரிமை கொண்டாடும் சீனா, அம்மாநிலத்துக்கு ஜங்னான் என்றும் பெயர் சூட்டி அழைத்து வருகிறது. ஆனால், அருணாச்சலப்பிரதேச மாநிலம் இந்தியாவினுடைய பகுதி என இந்தியா தொடர்ந்து நிராகரித்து வருகிறது. இதனிடையே, அருணாச்சலப் பிரதேசத்தின் மீதான தனது உரிமையை நிலைநாட்டும் முயற்சியாக அம்மாநிலத்தில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு அருகே உள்ள 30 இடங்களின் பெயர்களை தங்களது மொழியில் அண்மையில் சீனா மாற்றியது.

அதற்கு முன்பு 6 இடங்களை கொண்ட முதல் பட்டியலை கடந்த 2017 ஆம் ஆண்டில் சீனா வெளியிட்டது. 2021ஆம் ஆண்டில் 15 இடங்களை கொண்ட இரண்டாவது பட்டியலையும், 2023ஆம் ஆண்டில் 11 இடங்களுக்கான பெயர்களைக் கொண்ட மூன்றாவது பட்டியலையும் சீனா வெளியிட்டது கவனிக்கத்தக்கது.

அதிகாரம் முக்கியமா? சித்தாந்தம் முக்கியமா? கார்கே, சித்தராமையாவிடம் ராகுல் காந்தி கேள்வி!

அதேபோல், இந்தியாவுக்கும், நேபாளத்துக்கும் இடையே 1800 கி.மீ. நீள எல்லை உள்ளது. இதில் உத்தரகாண்ட் மாநிலத்தில் லிபுலேக் என்ற கணவாய் இருக்கிறது. அதையொட்டி லிம்பியாதுரா, கலாபாணி ஆகிய இடங்களும் அமைந்துள்ளன. ஆனால், இந்த பகுதிகளை நேபாளம் சொந்தம் கொண்டாடி வருகிறது. லிபு லேக்-கல்பானி மற்றும் லிம்பியாதுரா பகுதிகளை இணைந்து புதிய வரைபடத்தை கடந்த 2020ஆம் ஆண்டு நேபாளம் வெளியிட்டது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த நிலையில், இந்திய பகுதிகளை உள்ளடக்கிய வரைபடத்துடன் புதிய 100 ரூபாய் நோட்டை அண்டை நாடான நேபாளம் வெளியிடவுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த லிபு லேக்-கல்பானி மற்றும் லிம்பியாதுரா ஆகிய பகுதிகளை சொந்தம் கொண்டாடி வரும் நேபாளம், அந்த பகுதிகளை உள்ளடக்கிய புதிய 100 ரூபாய் நோட்டுகளை வெளியிட முடிவு செய்துள்ளது.

நேபாள பிரதமர் புஷ்பகமல் தஹல் பிரசந்தா தலைமையில், கடந்த ஏப்ரல் 25 மற்றும் மே 2 ஆகிய தேதிகளில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த புதிய 100 ரூபாய் நோட்டுகளை அச்சிட ஒப்புதல் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!