பாலியல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட சாமியார் ராம் ரஹீமுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஹரியானா சிபிஐ நீதிமன்ற நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.
தேரா சச்சா சௌதா ஆன்மிக அமைப்பின் தலைவராகத் திகழும் ராம் ரஹீம் சிங், 15 ஆண்டுகளுக்கு முன்னர் பக்தை ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு கடந்த 25 ஆம் தேதி ஹரியானா சிபிஐ நீதிமன்றத்திற்கு விசாரனைக்கு வந்தது. அப்போது, ராம் ரஹீம் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது என்றாலும், தண்டனை குறித்த விவரங்கள் வரும் 28 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி அறிவித்திருந்தார்.
இந்த வழக்கில் எதிர்மறையான தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டதால், ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டது.
லட்சக்கணக்கில் பக்தர்களையும் ஆதரவாளர்களையும் கொண்ட ராம் ரஹீம் சிங் மீது எதிர்மறையான தீர்ப்பு வந்தால் சுமார் 2 லட்சத்துக்கும் மேல் திரண்டுள்ள அவரது ஆதரவாளர்களால் வன்முறை அசம்பாவிதங்கள் நிகழக் கூடும் என்பதால், 144 தடை உத்தரவு, ராணுவம் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் என்று செய்யப் பட்டிருந்தது.
ஆனாலும், போலீசாரின் கட்டுப்பாட்டையும் மீறி அவரது ஆதரவாளர்களால் ஹரியானா பஞ்சாப், டெல்லி ஆகிய மாநிலங்களில் பல்வேறு அசம்பாவிதங்கள் நடைபெற்றன. மேலும் இந்த கலவரத்தில் 38 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.
இந்நிலையில், இன்று தீர்ப்பு குறித்து இறுதி வாதம் நடைபெற்றது. அப்போது, சமூக சேவகரான ராம் ரஹீமுக்கு மன்னிப்பு அளிக்க வேண்டும் அவர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். வாதம் நடைபெற்ற போது, சாமியார் ராம் ரஹீம் நீதிபதி முன்பு என்னை மன்னித்து விடுங்கள் என்று கதறி அழுதார்.
இருதரப்பு இறுதி வாதமும் முடிவுற்ற நிலையில், சாமியார் ராம் ரஹீமுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஹரியானா சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஜகப் தீப் சிங் அதிரடியாக உத்தரவிட்டார்.