இனிமேல் முட்டைப் போண்டாவுடன் ’டீ’ சேர்த்து சாப்பிடும் போது யோசிங்க..!!

By Dinesh TGFirst Published Feb 2, 2023, 1:05 PM IST
Highlights

உணவில் உள்ள குறைபாடுகள் வாயு, மலச்சிக்கல், குமட்டல் மற்றும் நெஞ்செரிச்சல் ஆகியவற்றை ஏற்படுத்தும். சில உணவுகள் இந்த பிரச்சனைகளை அதிகரிக்கலாம். அப்படியொரு பிரச்னையை ஏற்படுத்தக் கூடிய உணவுகள் தான் முட்டையும் டீயும்.
 

நமது அன்றாட வாழ்வில் பல்வேறு உடல்நல பிரச்சனைகளை சந்திக்கிறோம். செரிமான பிரச்சனைகள் இதில் முதன்மையானது. பெரும்பாலான நேரங்களில், மோசமான வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக செரிமான அமைப்பு பாதிக்கப்படுகிறது. குறிப்பாக, உணவுக் குறைபாடுகள் வாயு, மலச்சிக்கல், குமட்டல் மற்றும் நெஞ்செரிச்சல் ஆகியவற்றை ஏற்படுத்தும். சில உணவுகள் இந்த பிரச்சனைகளை அதிகரிக்கலாம். சில உணவுகள், மற்ற உணவுகளுடன் சேரும் போது குறிப்பிட்ட பிரச்னையை அதிகரிக்கக்கூடும். அந்தவகையில், முட்டையுடன் சாப்பிடக்கூடாத உணவுகள் மற்றும் பானங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

முட்டையும் தேநீரும்

தமிழ்நாட்டில் பல இடங்களில், மாலை நேரங்களின் போது முட்டை போண்டா விற்கப்படுகிறது. குறிப்பாக சாலையோரம் இருக்கும் தேநீர் கடைகளில் போடப்படும் முட்டை போண்டா ரொம்பவும் சிறப்பான உணவாகும். இதை சாப்பிட கூட்டம் கூட்டமாக மக்கள் வருவதுண்டும். ஆனால் முட்டையுடம் தேநீரை சேர்த்து சாப்பிடுவது, பல்வேறு உடல்நலப் பிரச்னையை உருவாக்குகிறது. இந்த உணவு சேர்க்கை மலச்சிக்கல், வாயு வெளியேற்றம் மற்றும் அமிலத்தன்மை அதிகரிப்பு போன்ற பல்வேறு பாதிப்புகளை வழங்குகிறது. முட்டை மற்றும் டீயை ஒன்றாகச் சாப்பிடுவதால், உடலில் முட்டையிலிருந்து குறைந்தளவிலான புரதம் மட்டுமே உறிஞ்சப்படுகிறது. தேநீர் புரதத்தை உறிஞ்சுவதை 17 சதவீதம் வரை தடுப்பதாக ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷன்' என்ற முன்னணி வெளியீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முட்டையும் சோயாப் பாலும்

சோயா பாலில் பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்திருப்பது நம் அனைவருக்குமே தெரியும். ஆனால் சோயா பால் முட்டையுடன் சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு நல்லது கிடையாது என்று கூறப்படுகிறது. முட்டையை சாப்பிட்டு சோயா பால் குடிக்கும் போது, முட்டையின் மூலம் உடலுக்கு கிடைக்க வேண்டிய புரதம் தடுக்கப்படுகிறது. இதனால் முட்டை சாப்பிடுவது பயனில்லாமல் போய்விடுகிறது.

முட்டையும் சக்கரையும் 

தவிர்க்க வேண்டிய அடுத்த சேர்க்கை முட்டை மற்றும் சர்க்கரை. இவற்றில் உள்ள அமினோ அமிலங்கள் ஒன்றாக உட்கொள்ளும் போது உடலுக்கு தீங்கு விளைவிப்பதால், இந்த கலவையை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. பொதுவாக கேக் அதிகம் சாப்பிடக் கூடாது என்று சொல்லப்படுவதன் பின்னணி இதுதான். இதுதவிர பிஸ்கட், பப்ஸ் போன்றவற்றிலும் முட்டையும் சக்கரையும் சேர்த்து சமைக்கப்படுகிறது. குறிப்பிட்ட உணவுகளை அடிக்கடி எடுத்துக்கொள்ளாமல், எப்போவாது சாப்பிடுவது நல்ல பலனை தரும். 

முட்டையும் பழமும்

முட்டை மற்றும் வாழைப்பழங்களை தொடர்ந்து உட்கொள்வது ஆரோக்கியத்தை மேம்படுத்தும். வாழைப்பழக் கூலில் சக்கரையை சேர்த்து கேக், புட்டிங், மில்க்‌ஷேக் போன்றவை செய்யப்படுகிறது. இவை அனைத்துமே ஆரோக்கியத்துக்கு கெடுதல் தான். வேண்டுமானால் சக்கரைக்கு பதிலாக நாட்டுச் சக்கரையை சேர்த்து அனைத்தையும் சமைக்கலாம். பஞ்சாமிர்தம் சுவையில் இருக்கும் மற்றும் உடலுக்கும் மிகவும் நல்லதாக அமையும். வாழைப்பழம் மற்றும் சக்கரையை சேர்த்து உண்டால், வயிற்றில் கனமாக இருக்கும். சிலருக்கு குறிப்பிடத்தக்க அஜீரணத்தையும் ஏற்படுத்துகிறது. நீங்கள் டயட்டில் இருந்தால், இவற்றை அடிக்கடி சாப்பிடலாம். ஆனால் அதற்கேற்றவாறு நன்றாக உழைப்பதும் முக்கியமாகும்.

முட்டையும் பிரியாணியும்

பெரும்பாலான ஹோட்டல்களில் முட்டையுடன் பிரியாணி வழங்கப்படுகிறது. ஆனால் உண்மையில் இறைச்சியுடன் முட்டை சாப்பிடுவது அவ்வளவு நல்லதல்ல. காரணம் வேறு ஒன்றும் இல்லை - குறுகிய காலத்திற்கு வயிற்றுக்கு நல்ல வேலைச் சுமை ஏற்படக்கூடும் என்பது மட்டுமே. நீங்கள் முட்டையும் பிரியாணியும் சாப்பிட்டுவிட்டு நன்றாக உழைத்தால் எந்த பிரச்னையுமில்லை. ஆனால் வேலை எதுவும் செய்யாமல் உட்கார்ந்து அல்லது படுத்து எழுந்தால், அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் உருவாகும். எனவே இந்த காம்போவை அடிக்கடி சாப்பிடுவதை கொஞ்சம் குறைத்துக்கொள்ளலாம்.
 

click me!