தமிழகத்தில் கோடை வெயில் அதிகரித்து, 13 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரியைத் தாண்டியுள்ளது. வளிமண்டல சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்த்து வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் 13 இடங்களில் 100 டிகிரி தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கரூர் - 104 டிகிரியும், வேலூர் - 103, ஈரோடு - 102, மதுரை விமான நிலையம் - 101, திருச்சி - 100, நாமக்கல் - 100, தருமபுரி - 100, மதுரை நகரம் - 100, பாளையங்கோட்டை - 100, சென்னை மீனம்பாக்கம் - 100, திருப்பத்தூர் - 100 வெயில் பதிவானது. இந்நிலையில் வரும் நாட்களில் வெயில் அதிகரிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
27
வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை
அதாவது சுமார் 0.9 கிமீ உயரத்தில், ஒடிசாவின் உட்பகுதிகள் முதல் மன்னார் வளைகுடா வரை தெற்கு சத்தீஸ்கர், தெலங்கானா, ராயலசீமா, உள் தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. வடக்கு தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
37
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை
இதன் காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய இடங்களான தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். அதேபோல் நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மற்ற இடங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 12 தென் தமிழகம். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மேலும் ஏப்ரல் 13 மற்றும் 14ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
57
லேசான மழைக்கு வாய்ப்பு
ஏப்ரல் 15 மற்றும் 16ல் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
67
வெப்பம் அதிகரிக்கும்
இன்று முதல் 14 வரை உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அசௌகரியம் ஏற்படலாம்.
77
சென்னை வானிலை நிலவரம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும். குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் தெரிவித்துள்ளது. தலைநகர் சென்னையில் வரும் நாட்களில் 100 டிகிரியை தாண்டி சுட்டெரிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.