இதுகுறித்து தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்ததாவது, “கடுமையான வெப்பம் காரணமாக சிறிய குழந்தைகள் உடல்நல பாதிப்புக்கு உள்ளாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது. குறிப்பாக ஆரம்பப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் வெயிலை தாங்க முடியாமல் சோர்வு, நீரிழப்பு, தலைச்சுற்றல் போன்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம். எனவே மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, பள்ளிகள் திறப்பை குறைந்தது ஒரு வாரமாவது தள்ளி வைக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளது.
மேலும், பல பள்ளிகளில் குடிநீர் வசதி, வகுப்பறை காற்றோட்டம், விசிறிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோடை காலத்தில் போதுமானதாக இல்லாத சூழல் இருப்பதாகவும் சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. மாணவர்களின் பாதுகாப்பே முதன்மை என்பதால், வானிலை சீராகும் வரை பள்ளிகள் திறப்பதை ஒத்திவைப்பது நல்லது என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.