Sarathkumar confident : பிரதமர் மோடியின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட நடிகர் சரத்குமார், பாஜக தலைமை தனக்கு ஓரிரு வாரங்களில் பொறுப்பு வழங்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். நிரந்தர வெற்றியோ, தோல்வியோ அரசியலில் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் பிரபல நடிகர் சரத்குமார், திமுக அதிமுக என தனது அரசியல் பயணத்தை தொடங்கியவர், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை தொடங்கி மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார்.
அடுத்தடுத்த தேர்தல்களில் வெற்றி பெறாத நிலையில். தனது கட்சியாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்தார். இதனையடுத்து கடந்த நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட சரத்குமாரின் மனைவி ராதிகா 3வது இடத்தை பிடித்தார்.
24
பாஜகவில் இணைந்த சரத்குமார்
இந்த நிலையில் கடந்த 2 வருடங்களாக பாஜகவில் இருக்கும் சரத்குமாருக்கு இதுவரை முக்கிய பதவி வழங்கப்படவில்லை. கடந்த வாரம் டெல்லி சென்றவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியிருந்தார்.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் 75ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை வடபழனியில் உள்ள முருகன் கோவிலில் தங்கத்தேர் இழுத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றறது. இதில் சிறப்பு விருந்தினராக தேசிய பொதுக்குழு உறுப்பினரும்,நடிகருமான சரத்குமார் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து பக்தர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
34
மோடிக்காக தங்க தேர் இழுத்த சரத்குமார்
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், முருகனை சந்திப்பதே வெற்றிக்கான அறிகுறி தான் என தெரிவித்தவர், பிரதமரின் பிறந்தநாளில் தேர் இழுத்து வாழ்த்துகள் தெரிவிப்பதில் நாம் கடமைப்பட்டுள்ளோம். அவர் என்றும் நலமோடு,வளமோடு பாரத தேசத்தை மேலும்மேலும் உயரிய இடத்திற்கு எடுத்து செல்ல வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறோம் என கூறினார்.
மோடி அவர்கள் மிகவும் நல்ல மனிதர் குஜராத்தில் 3 முறை முதல்வராக 3 முறை பிரதமராக இருக்கும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்க வந்துள்ளேன்.
இன்னும் ஓரிரு வாரங்களில் நான் என்ன செய்ய வேண்டும் என்று பாஜக தலைமை எனக்கு ஒதுக்கும் அப்போது அரசியல் சார்ந்த கேள்விக்கு பதிலளிக்க காத்திருக்கிறேன் என கூறினார். சரத்குமாரின் தனிப்பட்ட முறையில் சுற்றுப்பயணம் செய்ய ஏதேனும் திட்டம் உள்ளதா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், தனிப்பட்ட முறையில் சுற்றுப்பயணம் எதுவும் நான் திட்டமிடவில்லை பாஜக தலைமை கட்டளையிடும் பொழுது சிறப்பாக பணிபுரிய காத்திருக்கிறேன் என கூறினார்.
எத்தனை தேர்தல் வந்தாலும் தி.மு.க. தொடர்ந்து வெற்றி பெறும் எந்த கொம்பனாலும் தி.மு.க.வை தோற்கடிக்க முடியாது என முதல்வர் பேசியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், நிரந்தரமாக வெற்றி பெற்றவர்களும் கிடையாது நிரந்தரமாக தோல்வி பெற்றவர்களும் கிடையாது என சரத்குமார் தெரிவித்தார்.