Breaking News: மஃப்டியில் வந்த அமைச்சர்.! ரூ.4,000 மாமூல் கேட்ட அர்ச்சகர்கள் - திருச்செந்தூர் கோவிலில் பரபரப்பு.!

Published : May 29, 2026, 11:58 AM IST

Thiruchendur Temple Priests Accept ₹4000 Bribe from HRCE Minister Ramesh: திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனத்திற்கு வந்த அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷிடம் அர்ச்சகர்கள் வசூல் வேட்டை நடத்தியுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. 

PREV
15
அமைச்சர் ரமேஷிடம் ரூ.4,000 லஞ்சம்

தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள விஜய் தலைமையிலான தவெக அரசில் பெரும்பாலானோர் இளைஞர்களாக இருக்கின்றனர். இவர்கள் பதவியேற்றது முதல் தங்கள் துறைகள் சம்பந்தப்பட்ட பல்வேறு ஆய்வுகள், ஆலோசனைக் கூட்டங்கள், கள ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் 32 வயதே ஆன இளம் அமைச்சராக இருக்கும் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், பல்வேறு கோயில்களுக்குச் சென்று நேரடியாக ஆய்வு நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவர் இன்று திருச்செந்தூர் சுப்பிரமணியர் சாமி கோவிலுக்கு ஆய்விற்காக சென்றிருந்தார்.

25
திருச்செந்தூர் கோவிலில் அமைச்சர் ரமேஷ் ஆய்வு

அப்போது அன்னதான கூடத்திற்கு சென்று உணவின் தரத்தை ஆராய்ந்து கொண்டிருந்தார். அந்த சமயம் கோவிலில் இருந்த அர்ச்சகர் ஒருவர் அமைச்சர் ரமேஷிடம் ரூ.4,000 தந்தால் விஐபி தரிசனத்திற்கு அழைத்துச் செல்வதாக கூறியுள்ளார். இதையடுத்து ஜிபே மூலம் பணத்தை செலுத்திய அமைச்சர் ரமேஷ், தரிசனத்திற்கு சென்றுள்ளார். ரமேஷ் டிஷர்ட் அணிந்து சென்றதால் அவர் தான் அமைச்சர் என்பது தெரியாமலேயே அர்ச்சகர் வசூல் வேட்டை நடத்தி இருக்கிறார். அதன் பின்னர் தாம் தான் அறநிலையத்துறை அமைச்சர் என்று ரமேஷ் சொன்னதும் அர்ச்சகர் ஆடிப் போயிருக்கிறார். இதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அர்ச்சகர் மீதும், கோவில் நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அமைச்சர் ரமேஷ் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

35
திருச்செந்தூரில் தொடர்ந்து நடக்கும் அவலம்

திருச்செந்தூர் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் பல ஆயிரம் ரூபாயை லஞ்சமாக பெற்றுக்கொண்டு அர்ச்சகர்கள் பலரும் விரைவு தரிசனத்திற்கு அழைத்துச் செல்வதாக பல ஆண்டுகளாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இது குறித்து முந்தைய திமுக அரசு பல நடவடிக்கைகளை எடுத்த போதும் தொடர்ந்து இந்த குற்ற சம்பவங்கள் நடந்து வந்தது. கீழ்மட்டம் முதல் மேல் மட்டம் வரை பல அதிகாரிகளுக்கு இது தொடர்பிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. தீவிர விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

45
கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் உறுதி

இந்த நிலையில் இன்று அமைச்சர் ஆய்வுக்கு வர இருப்பதாக எந்தவித முன்னறிவிப்பும் செய்யவிடவில்லை. இதன் காரணமாக அலுவலகத்திற்கு ஊழியர்கள் சரியான நேரத்திற்கு வரவில்லை. ஒவ்வொருவரும் வெவ்வேறு நேரத்திற்கு வந்திருக்கின்றனர். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அமைச்சர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக தயாராகி வருகிறார். மேலும் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் ரமேஷ், “திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் தரிசனம், அன்னதானம், அடிப்படை வசதிகள், திருப்பணிகள் மற்றும் நிலுவையில் உள்ள வருவாய் குறித்த பல்வேறு கோணங்களில் ஆய்வு நடத்தி வருகிறோம். முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் பாகுபாடின்றி விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

55
பொதுமக்கள் கோரிக்கை

அமைச்சர் ரமேஷின் பதிவுக்கு கீழே, “உங்களிடம் லஞ்சம் வாங்கியவர்கள் மீது பாரபட்சம் இல்லாமல் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து கோவில்களிலும் சிறப்பு தரிசன முறையை ரத்து செய்து அனைவருக்கும் சமமான பொது தரிசன முறையை அமல்படுத்த வேண்டும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களுக்கும் திருப்பணியை நடத்த வேண்டும்” என்று மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories