கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் பல்வேறு இடங்களில் குடிநீர் குழாய்களில் உடைப்பு

First Published Feb 11, 2023, 12:15 PM IST

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் பல்வேறு இடங்களில் தண்ணீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வீணாகி வருகிறது.  

கோவையின் முக்கிய பகுதியாக திகழும் ரேஸ்கோர்ஸ் பகுதியில் மாவட்ட ஆட்சியர் குடியிருப்பு உட்பட அரசு அலுவலர்களின் குடியிருப்புகள், கல்வி நிறுவனங்கள் உள்ளன. இப்பகுதி ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. 
 

இத்துடன், சாலை புதுப்பிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபாதைகள் விரிவாக்கப்பட்டு உடற்பயிற்சி மேற்கொள்ளவும், குழந்தைகள் விளையாடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இப்பகுதியில், மரங்கள் மற்றும் செடிகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. 
 

இதையடுத்து, இப்பகுதி மக்கள் தற்போது காலை மற்றும் மாலை வேலைகளில் இங்கு நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். பொழுதுபோக்குவதற்கு என்றும் பொதுமக்கள் இங்கு வருகின்றனர். மாநகராட்சி மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகளும் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகிறது.  
 

இந்தநிலையில் இன்று காலை அப்பகுதியில் பெரும்பாலான இடங்களில் மரங்கள் மற்றும் செடிகளுக்கு தண்ணீர் பாய்த்துவதற்காக போடப்பட்டிருந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு அதிகப்படியான நீர் வெளியேறி வருகிறது. குடிநீர் குழாயிலும் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது.  

மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குழாய்கள் பொருத்தப்பட்டு சில மாதங்களே ஆன நிலையில் பல்வேறு இடங்களில் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு இருப்பது பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

click me!