இந்தியாவில் ஐபிஎல் நடத்தப்படுவதை போல, பாகிஸ்தானில் பாகிஸ்தான் சூப்பர் லீக், ஆஸ்திரேலியாவில் பிக்பேஷ் லீக், இலங்கையில் லங்கா பிரீமியர் லீக், வங்கதேசத்தில் வங்கதேச பிரீமியர் லீக், தி ஹண்ட்ரெட், கரீபியன் பிரீமியர் லீக் என உலகம் முழுதும் பல்வேறு டி20 லீக் தொடர்கள் நடத்தப்படுகின்றன.
அனைத்து நாடுகளின் கிரிக்கெட் வீரர்களும் ஐபிஎல்லில் ஆடும் நிலையில், இந்திய வீரர்கள் யாரும் வெளிநாட்டு டி20 லீக் தொடர்களில் ஆட அனுமதிக்கப்படுவதில்லை. இந்திய வீரர்களை வெளிநாட்டு டி20 லீக் தொடர்களில் ஆட பிசிசிஐ அனுமதிப்பதில்லை.
இந்நிலையில், பிசிசிஐ இந்திய வீரர்களை ஏன் வெளிநாட்டு டி20 லீக்குகளில் ஆட அனுமதிப்பதில்லை என்று ஆஸி., முன்னாள் ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு பதிலளித்துள்ள இந்திய முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், இந்திய வீரர்களை பிக்பேஷ் லீக் அல்லது தி ஹண்ட்ரெட் ஆகிய வெளிநாட்டு லீக் தொடர்களில் ஆட அனுமதிக்க வேண்டும் என்று வெளிநாட்டு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சிலர் வலியுறுத்துகின்றனர். இந்திய வீரர்கள் ஆடினால் கூடுதல் ஸ்பான்சர்ஷிப் கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். அவர்கள் நாட்டின் கிரிக்கெட் வளரவேண்டும் என்ற அவர்களது அக்கறை எனக்கு புரிகிறது. ஆனால் இந்திய வீரர்களை சர்வதேச கிரிக்கெட்டுக்கு ஃப்ரெஷ்ஷாக வைத்திருக்கும் நோக்கில் பணிச்சுமையை அதிகரிக்க வேண்டாம் என்பதற்காக வெளிநாட்டு லீக் தொடர்களில் ஆட அனுமதிப்பதில்லை என்று கவாஸ்கர் கருத்து கூறியுள்ளார்.