டி20 உலக கோப்பையின் டாப் 3 பேட்டிங் ஆர்டர்..! 2 இடத்திற்கு 4 வீரர்களுக்கு இடையே போட்டி

First Published Aug 12, 2022, 2:42 PM IST

டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் டாப் 3 பேட்டிங் ஆர்டர் குறித்து முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து கூறியுள்ளார்.
 

ஆசிய கோப்பை ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. அதைத்தொடர்ந்து டி20 உலக கோப்பை அக்டோபர் - நவம்பரில் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. அடுத்தடுத்து நடக்கும் இந்த 2 முக்கியமான கோப்பைகளையும் வெல்லும் முனைப்பில் உள்ளது இந்திய அணி.

ரோஹித் சர்மா தலைமையிலான அனுபவமும் இளமையும் கலந்த வலுவான இந்திய அணி, இந்த 2 கோப்பைகளையும் வெல்ல தீவிரமாக தயாராகிவருகிறது. ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுவிட்டது.
 

அடுத்ததாக நடக்கவுள்ள டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. எனவே டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் இடம்பெறுகின்றனர் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலாக காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இதையும் படிங்க - இந்த பையன் கிரிக்கெட்டுக்கு கிடைத்த கிஃப்ட் பிளேயர்.! 3 ஃபார்மட்டிலும் இவன் தான் நம்பர் 1.. ஜெயவர்தனே புகழாரம்

பவுலிங் யூனிட் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. புவனேஷ்வர் குமார், ஷமி, ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான் ஆகியோர் ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டில் இடம்பெறுவார்கள். காயத்தால் ஆசிய கோப்பையில் ஆடாத பும்ரா, டி20 உலக கோப்பையில் ஆடுவதும் சந்தேகம் என்று தகவல் வெளியாகியுள்ளது. எனவே அவர் ஆடுவது சந்தேகம். ஒருவேளை ஆடினால் அது இந்திய அணிக்கு பெரிய பலம். ஆசிய கோப்பைக்கான அணியில் ஷமி எடுக்கப்படவில்லை என்றாலும், டி20 உலக கோப்பைக்கான அணியில் அவர் எடுக்கப்படுவார்.

பேட்டிங் ஆர்டர் தான் பெரும் புதிராக உள்ளது. ராகுல், கோலி ஆடாத போட்டிகளில் சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் ஆகியோர் டாப் ஆர்டரில் இறக்கி பரிசோதிக்கப்பட்டனர். இருவருமே நன்றாக ஆடினர். ஆனால் சூர்யகுமார் யாதவ் டாப் ஆர்டரில் சற்று கூடுதல் கவனம் ஈர்த்தார். ரிஷப் பண்ட் இடது கை பேட்ஸ்மேன் என்பதால், வலது கை ஓபனர் ரோஹித்துடன் ரிஷப்பை இறக்கலாம் என்ற கருத்தும் உள்ளது.

ஆனால் ராகுலும் கோலியும் அணியில் இருந்தால் சூர்யகுமாரும் ரிஷப்பும் எந்த பேட்டிங் ஆர்டரில் இறக்கப்படுவார்கள் என்பது பெரும் புதிராக உள்ளது. ரோஹித்துடன் ராகுல் ஓபனிங்கில் இறங்குவாரா அல்லது கோலியே இறக்கப்படுவாரா என்பதும் கேள்வியாக உள்ளது. கோலியின் மோசமான ஃபார்மும் கவலையளிக்கும் விதமாக உள்ளது. எனவே ஃபார்மை கருத்தில்கொண்டு அதிரடி முடிவுகள் எதுவும் எடுக்கப்படுமா என்பதையும் பார்க்கவேண்டும்.

இதையும் படிங்க - இவரை ஏன்யா இன்னும் புடிச்சு தொங்கிட்டு இருக்கீங்க? இந்திய அணியில் சீனியர் வீரரின் தேர்வை விமர்சித்த கிரன் மோர்

இந்நிலையில், டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் டாப் 3 பேட்ஸ்மேன்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த சஞ்சய் மஞ்சரேக்கர்,  இதற்கு பதில் சொல்வது ரொம்ப கஷ்டம். உண்மையாக ரொம்ப கஷ்டம். ஏனெனில் இந்த இடங்களுக்கு கடும் போட்டி நிலவுகிறது. ராகுல், கோலி கண்டிப்பாக இந்திய அணியில் இருப்பார்கள். சூர்யகுமாரும் ஓபனிங்கில் நன்றாக ஆடியிருக்கிறார். ரிஷப் பண்ட்டும் டாப் 3ல் ஆடியிருக்கிறார். எனவே நிறைய ஆப்சன்கள் உள்ளன.

ரோஹித்துடன் ரிஷப் பண்ட் தொடக்க வீரராக இறங்கும் ஆப்சன் எனக்கு பிடித்திருக்கிறது. எனவே டாப் 3 பேட்ஸ்மேன்களை தேர்வு செய்வது மிகக்கடினம். விராட் கோலி, ராகுல், சூர்யகுமார் யாதவ் என ரிஷப் பண்ட்டுக்கு கடும் போட்டி உள்ளது என்று சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து கூறியுள்ளார்.

click me!