IPL : கடும் வெயில் காரணமாக ஐபிஎல் தொடரை செப்டம்பர்-அக்டோபர் மாதங்களுக்கு மாற்ற பிசிசிஐ ஆலோசனை!

Published : May 27, 2026, 04:55 PM IST

IPL : கடும் கோடை வெப்பம் மற்றும் வீரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஐபிஎல் தொடரை செப்டம்பர்-அக்டோபர் மாதங்களுக்கு மாற்றுவது குறித்து பிசிசிஐ ஆலோசித்து வருகிறது. இந்த காலகட்டம் விளம்பரதாரர்களுக்கு 'கோல்டன் விண்டோ' ஆக அமையும் என்பதும் கூடுதல் சிறப்பு.

PREV
14
BCCI ஆலோசனை

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல் மே மாதம் வரையிலான கோடை காலத்தில் ஐபிஎல் (IPL) டி20 கிரிக்கெட் தொடர் நடத்தப்படுவது வழக்கமாகும். ஆனால், சமீபகாலமாக மே மாதத்தில் நிலவி வரும் கடுமையான வெயில் மற்றும் வெப்ப அலை காரணமாக, போட்டிகளை செப்டம்பர்-அக்டோபர் மாதங்களுக்கு மாற்றுவது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) ஆலோசித்து வருகிறது.

ஐபிஎல் தலைவர் அருண் துமால் (Arun Dhumal) சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இத்தகவலைப் பகிர்ந்துள்ளார்.

24
முக்கிய காரணங்கள்

தற்போது நிலவும் காலநிலை மாற்றத்தால், மே மாதத்தில் போட்டிகளை நடத்துவது பெரும் சவாலாக மாறியுள்ளது. கடுமையான வெப்பம் மற்றும் அதிகப்படியான ஈரப்பதம் (Humidity) காரணமாக வீரர்கள் எளிதில் சோர்வடைவதோடு, தசைப்பிடிப்பு (Cramps) மற்றும் காயங்களால் அவதிப்படுகின்றனர்.

மேலும், சர்வதேச போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடிவிட்டு வரும் வீரர்களுக்குப் போதிய ஓய்வு கிடைப்பதில்லை. இதனால் வீரர்களின் நலனைக் கருத்தில் கொண்டும், காயங்களைத் தவிர்க்கும் விதமாகவும் பிசிசிஐ இந்த புதிய கால அட்டவணை மாற்றத்தை பரிசீலித்து வருகிறது.

34
விளம்பரதாரர்களின் பார்வையில் 'கோல்டன் விண்டோ'

விளம்பரதாரர்கள் மற்றும் ஒளிபரப்பு நிறுவனங்களின் வணிகக் கண்ணோட்டத்தில் பார்த்தால், செப்டம்பர்-அக்டோபர் மாதங்கள் மிகவும் சாதகமான ஒரு காலப்பகுதியாகும். ஏனெனில், இந்தியாவில் இந்த மாதங்களில் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளின் காலம் தொடங்குவதால், நிறுவனங்கள் தங்களின் விளம்பரங்களுக்காக அதிக அளவில் முதலீடு செய்யத் தயாராக இருக்கும்.

"போட்டிகளை வேறொரு மாதத்திற்கு மாற்றுவது குறித்து ஒளிபரப்பு நிறுவனங்களுடன் விரிவாகக் கலந்தாலோசிக்க வேண்டும். செப்டம்பர்-அக்டோபர் விண்டோ என்பது விளம்பரதாரர்களுக்கு மிகச் சிறந்த நேரமாகும்; ஏனெனில் இது தீபாவளிக்கு முந்தைய பண்டிகைக் காலம். அடுத்த இருதரப்பு உரிமைக்கான (Bilateral Tender) ஏலம் வரும்போது, இதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வோம்" என்று அருண் துமால் தெரிவித்துள்ளார்.

44
2028 முதல் போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா?

ஐபிஎல் நிர்வாகக் குழு வரும் 2028-ஆம் ஆண்டு முதல் போட்டிகளின் எண்ணிக்கையை தற்போதைய 74-லிருந்து 94 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது. தற்போதைய இரண்டு மாத கால அவகாசத்திற்குள் இவ்வளவு போட்டிகளை நடத்துவது சாத்தியமற்றது. இதனால் தொடரை இரு பகுதிகளாகப் பிரித்து, ஒரு பகுதியை பிப்ரவரி-ஏப்ரல் மாதங்களிலும், மற்றொரு பகுதியை செப்டம்பர்-அக்டோபர் மாதங்களிலும் நடத்தும் யோசனையும் பரிசீலனையில் உள்ளது.

இருப்பினும், இந்த இறுதி முடிவு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) கால அட்டவணை மற்றும் பிற நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களின் ஒப்புதலைப் பொறுத்தே அமையும். தற்போதைக்கு இதில் எவ்வித அவசரமும் இல்லை என்றும், அனைத்துத் தரப்பினருடனும் ஆலோசித்த பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் ஐபிஎல் தலைவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories