
நடப்பது உடலுக்கு நல்ல பயன்களை தந்தாலும் சில விஷயங்களை கவனிக்க தவறும் போது எதிர்மறையான விளைவுகளையும் சந்திக்க கூடும். வீட்டிற்கு வெளியே காலணி அணியாமல் வெறும் கால் உடன் நடக்கும் போது என்ன ஆகும் என்பது குறித்து பலரும் அறிந்து வைத்திருப்பதில்லை. தரையுடன் தொடர்பு கொள்ள வேண்டும். கால்களை வலுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட காரணங்களுக்காக சிலர் வெறுங்காலுடன் நடக்கிறார்கள்.
வெறுங்காலில் நடந்தால் நன்மை உண்டா?
- செருப்பு அணியாமல் தினமும் சிறிது நேரம் வெறுங்காலில் நடப்பதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. உண்மையில் வெறுங்காலுடன் நீங்கள் நடந்தால் கால்கள் வலுப்பெறும். இரத்த ஓட்டம் மேம்படுகிறது. சமதளமற்ற பரப்புகளில் நடக்கும்போது கால்களில் ஏற்படும் அழுத்தம் உடலின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. வெறுங்காலில் நடப்பதால் மன ஆரோக்கியம் மேம்படுகிறது.
- தினமும் வெறுங்காலில் நடந்தால் உங்களுடைய தோரணை மாறும். உடலுக்கு சமநிலை கிடைக்கும். தரையில் நேரடியாக கால்கள் படுவதன் மூலமாக பாதங்களில் சமநிலையும் ஏற்படுகிறது. அது மட்டுமின்றி உங்களுடைய தொடை தசைகள் இறுகும். வெறுங்காலில் நடப்பதால் உங்களுடைய கால்களின் அனைத்து தசைகளும் ஒன்றாக செயல்பட்டு வலுப்பெறுகின்றன.
- நீங்கள் வேகமாக நடப்பதற்கு வெறுங்காலுடன் நடப்பது உதவியாக இருக்கிறது. வெறுங்காலுடன் நடப்பது உங்களுடைய நடை வேகத்தையும், நகரும் வசதியையும் அதிகரிக்கிறது. அதுமட்டுமின்றி முழங்கால்கள், இடுப்பு, உடலின் மையப்பகுதியில் நல்ல இயக்கம் இருக்கும். பொருத்தமற்ற காலணிகளை அணிந்து நடப்பது தேவையில்லாத வலிகளை தரும். வெறுங்காலில் நடந்தால் அந்த பிரச்சனை வராது.
குழந்தை வெறுங்காலில் நடக்கலாமா?
பெரும்பாலும் குழந்தைகள் வெறுங்காலுடன் நடப்பதற்கு விரும்புவார்கள். இதற்கு முக்கிய காரணம் காலணிகள் இல்லாமல் நடப்பதை அவர்கள் சுதந்திரமாக உணர்வார்கள். மேலும் அவர்களின் கால்கள் வலுப்பெறவும், எண்ணத்திற்கு ஏற்ப தடையின்றி நடக்கவும், ஓடவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் காயங்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது. அதனால் குழந்தைகளை காலணி அணிய பெற்றோர் வற்புறுத்துவார்கள். மற்றபடி வெறுங்காலில் நடப்பது நல்லதே.
இதையும் படிங்க: தினமும் தூங்கும் முன் 'வாக்கிங்'.. யாரும் அறியாத பயனுள்ள '10' நன்மைகள்!!
பாதிப்புகள்:
நீங்கள் வெறுங்காலில் நடக்கும்போது உங்களுக்கு காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. உடைந்த கண்ணாடிகள், முள், ஆணி போன்ற தூக்கி எறிந்த தேவை இல்லாத ஏதேனும் பொருள்கள் உங்கள் பாதங்களை காயப்படுத்த கூடும். அது மட்டுமின்றி நீங்கள் சுத்தமான இடத்தில் நடைபயிற்சி மேற்கொள்ளாவிட்டால் தேவையில்லாத நுண்ணுயிர் தொற்று ஏற்படும் வாய்ப்புள்ளது. அசுத்தமான இடங்களில் காணப்படும் பாக்டீரியா, பூஞ்சை போன்ற தொற்றுக்களை உண்டாக்கும் நுண்ணுயிர்கள் கால்களில் பாதிப்பை உண்டு பண்ணலாம்.
எங்கு வெறும் காலில் நடக்கலாம்?
சுத்தமான சமதள பரப்புகளில் வெறுங்காலில் நடைபயிற்சி செய்யலாம். புல்வெளி, மணல், தரை விரிப்பு ஆகியவற்றின் மீதும் வெறுங்காலில் நடக்கலாம். கோயில் போன்ற புனித தலங்களில் வெறுங்காலில் நடக்கும் போது புத்துணர்வாக உணர்வோம். மற்றபடி வெறும் காலில் நடக்கும்போது கூடுதல் கவனமாக இருப்பது அவசியம்.
இதையும் படிங்க: வெறும் '6' நிமிட வாக்கிங் போதும்.. உங்க உடம்ப பத்தி ஈஸியா தெரிஞ்சுக்கலாம்!!