
நடைபயிற்சி நமது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. தினமும் நடப்பது இதயத்தை நன்றாக பராமரிக்க உதவுவதோடு எடை மேலாண்மையிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் நடைபயிற்சி செய்யும் போது தெரியாமல் செய்யும் சில தவறுகளால் காயங்கள், உடல் நலப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த பதிவில் பெரும்பாலான தெரியாமல் செய்யும் ஐந்து தவறுகளை குறித்து காணலாம்.
நடக்கும் போது நேராக பார்த்து நிமிர்ந்த தோற்றத்தில் நடக்க வேண்டும். உங்களுடைய தோரணை சரியாக இருப்பது அவசியம். அடிக்கடி தரையை பார்த்து நடப்பதால் கழுத்திலும், தோள்களிலும் அழுத்தம் ஏற்பட்டு வலி ஏற்படும் வாய்ப்புள்ளது. நீங்கள் நடக்கும்போது தொடர்ந்து கீழே பார்த்து நடப்பதால் உங்களுடைய முதுகெலும்பு வடிவமைப்பில் பாதிப்பு ஏற்படலாம். இதனால் உங்களுடைய தோரணையில் மாற்றம் ஏற்படும் வாய்ப்புகளும் உள்ளது.
சிலர் அதிக எடையை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அதிகமாக நடப்பதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். சாதரணமாக நடக்காமல் நீண்ட தூரம் காலடிகளை எடுத்து வைத்து வேகமாக நடப்பதாக நினைத்து கொள்வார்கள். இப்படி உங்களுடைய இயல்புக்கு மாறாக காலடிகள் வைப்பதால் முழங்கால்கள், இடுப்பு, கணுக்கால்களில் அதிக அழுத்தம் ஏற்பட்டு வலி ஏற்படலாம். எப்போதும் போல சாதரணமாக நடங்கள்.
கைகளை வீசி நடக்காமல் நடைபயிற்சி செய்வது உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்தலாம். கைகளை உடலுக்கு பக்கவாட்டில் இறுக்கமாக வைத்துக்கொண்டு அசைக்காமல் நடப்பதால் உங்களுடைய உடலில் சமநிலை பாதிக்கப்படுகிறது. ஒட்டுமொத்த உடலும் இயங்காமல் பகுதிநிலை செயல்பாடு மட்டும் இருப்பதால் கலோரிகளும் குறைவாகவே எரிக்கப்படுகின்றன. நீங்கள் கைகளை வீசி நடக்கும் போது உங்களுடைய வேகம் அதிகரிக்கிறது. உடலின் சமநிலையும் மேம்படுகிறது. இதனால் அதிகமான கலோரிகள் எரிக்கப்படும்.
நடைபயிற்சி செய்யும் போது கவனம் சிதறாமல் நடப்பது அவசியம். நீங்கள் செல்போன் பார்த்துக் கொண்டே அல்லது செல்போன் பேசிக்கொண்டே நடப்பதால் தடுமாறி விழ நேரிடலாம். இதனால் உங்களுடைய தோரணையில் மாற்றம் ஏற்படலாம். சுற்றி நடக்கும் விஷயங்கள் குறித்து நீங்கள் விழிப்புணர்வாக இல்லாமல் அலட்சியமாக நடக்கும்போது எதிர்மறையான விளைவுகள் ஏற்படக் கூடும். அதனால் நடக்கும் போது கவனமாக இருங்கள்.
இதையும் படிங்க: வாக்கிங் கூட இந்த '2' பழக்கங்கள்.. இளமை திரும்பிடும்!!
நடைபயிற்சி செய்யும் போது நீரிழப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. கோடை காலங்களில் உடலுக்கு அதிகமான தண்ணீர் தேவைப்படும். அந்த சமயத்தில் போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் நடப்பது சோர்வையும், தசைப்பிடிப்பு, தலைச்சுற்றல் போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்தலாம்.
இதையும் படிங்க: வாக்கிங் vs ரன்னிங்- பெண்கள் நடைபயிற்சிக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கனும்?
நடக்கும்போது சரியான காலணிகளை அணிவது அவசியம். நல்ல பஞ்சு போன்ற மென்மையான அமைப்பு கொண்ட ஷூ அல்லது செருப்புகளை பயன்படுத்தலாம். கடினமான செருப்புகள் கால்களில் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும். அவற்றை தவிர்ப்பது நல்லது. நல்ல காலணிகள் மட்டுமே நடைபயிற்சியை பாதுகாப்பானதாக மாற்றும். உங்களை காயங்களிலிருந்து பாதுகாக்க ஷூக்கள் பயன்படுகின்றன.