
சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பின்படி, 20 முதல் 79 வயதுக்குட்பட்ட சுமார் 589 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். நீரிழிவு நோய் கண்டறியப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த மருந்துகளை எடுத்துக்கொள்கிறார்கள், ஆனால் அவர்களால் தங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த முடிவதில்லை. உணவுமுறை, உடல் செயல்பாடு, தூக்கத்தின் தரம் மற்றும் மன அழுத்தம் ஆகியவை இரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் இரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த முடியாமல், அது ஒரு குறிப்பிட்ட வரம்பிற்கு மேல் இருக்கும்போது மருத்துவர்கள் நீரிழிவு நோய்க்கான மருந்துகளைப் பரிந்துரைக்கின்றனர். பல காரணிகள் இரத்தச் சர்க்கரை அளவைப் பாதிக்கின்றன என்று 'தி டயாபடீஸ் ஜர்னல்' குறிப்பிட்டுள்ளது.
சரியான மருந்துகள் மூலம் இரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த முடியும் என்றாலும், அதில் திடீர் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டால், இன்னும் கடுமையான நடவடிக்கைகள் தேவைப்படலாம். இரத்த குளுக்கோஸ் அளவைத் தொடர்ந்து கண்காணிப்பதன் மூலம் மட்டுமே இதைச் செய்ய முடியும்.
நீங்கள் உங்கள் நீரிழிவு நோய்க்கான மருந்துகளைத் தவறாமல் எடுத்துக்கொள்வதால் மட்டுமே, நாள் முழுவதும் உங்கள் இரத்தச் சர்க்கரை அளவு சீராக இருக்கும் என்று அர்த்தமல்ல. மருந்துகளை எடுத்துக்கொண்ட போதிலும், திடீரென இரத்தச் சர்க்கரை அளவு அதிகரிப்பதை உணரும்போது பல நோயாளிகள் ஆச்சரியப்படுகிறார்கள்.
மருந்துகளைத் தவிர, நாம் உண்ணும் உணவு, அதை உண்ணும் நேரம், உண்ணும் அளவு, உடற்பயிற்சி, உறக்கம், மன அழுத்தம் மற்றும் உடலில் ஏற்படும் ஏதேனும் தொற்றுகள் ஆகிய அனைத்தும் இரத்தச் சர்க்கரை அளவைப் பாதிக்கக்கூடும் என்கிறார் நொய்டாவில் உள்ள மெட்ரோ மருத்துவமனை மற்றும் இதய நிறுவனத்தின் உள் மருத்துவ ஆலோசகரான டாக்டர் அக்ஷய் சுக். இரத்தச் சர்க்கரை அளவு உயர்வதற்கான சில காரணங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
சுத்திகரிக்கப்பட்ட மாவுச்சத்துக்களை அதிகமாக உட்கொள்வது, அவை உங்கள் உடலுக்குள் அறியாமலேயே அதிக சர்க்கரையை வெளியிடுவதால், உங்கள் இரத்தச் சர்க்கரை அளவை விரைவாக அதிகரிக்கச் செய்யும். வெள்ளை அரிசி, இனிப்புகள், சர்க்கரை கலந்த பானங்கள் மற்றும் பேக்கரிப் பொருட்கள் ஆகியவை இந்த மாவுச்சத்துக்களுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும். எனவே, அவற்றின் நுகர்வைக் கட்டுப்படுத்துவது அவசியம்.
நீரிழிவு நோய்க்கான மருந்துகளை பரிந்துரைக்கப்பட்ட நேரத்தில் எடுத்துக்கொள்ளாதது, இரத்த சர்க்கரை அளவுகளில் எதிர்பாராத ஏற்ற இறக்கங்களுக்கு வழிவகுக்கும் என்று 'தி டயாபடீஸ் ஜர்னல்' கண்டறிந்துள்ளது. தவறான நேரத்தில் மருந்துகளை எடுத்துக்கொள்வது இரத்த சர்க்கரை அளவுகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
உடலில் இன்சுலின் எதிர்ப்பு (தொடர்ச்சியான) இருக்கும்போது, கணையம் அதிகப்படியான இன்சுலினை உற்பத்தி செய்கிறது. ஆனால், இரத்த நாளங்களால் அதைச் சரியாக உறிஞ்சிக்கொள்ள முடிவதில்லை. உங்கள் உடல் எடை அதிகரித்தாலோ அல்லது உங்கள் அன்றாட உடல் செயல்பாடுகளைக் குறைத்தாலோ, காலப்போக்கில் நீரிழிவு நோய் மோசமடையக்கூடும்.
தூக்கத்தின் தரம் குறைவாக இருப்பது, அதாவது 7 முதல் 9 மணி நேரம் தூங்காமல் இருப்பது, இன்சுலின் உணர்திறனைப் பாதிக்கக்கூடும் என்று கியூரஸ் இதழ் சுட்டிக்காட்டுகிறது. வகை 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் தூக்கம் தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இது அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தைப் பாதிக்கக்கூடும்.
காய்ச்சல், தொற்று அல்லது பிற நோய்கள் உடலில் அழற்சியை ஏற்படுத்தி, அதன் காரணமாக இரத்த சர்க்கரை அளவு உயரக்கூடும். உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்து, அதற்கான சிகிச்சையை நீங்கள் பெற்றுக்கொண்டிருந்தால், பாதுகாப்பாக இருப்பதற்கு உங்கள் இரத்த சர்க்கரை அளவைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.