இன்றைய காலக்கட்டத்தில் சாதாரண மக்கள் கூட ஆடம்பர பொருட்களையும் விலை உயர்ந்த பொருட்களை வாங்கி குவிக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். ஆனால் ரூ. 775 கோடி சொத்துக்கு அதிபதியாக இருக்கும் பெண்மணி ஒருவர் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? உண்மை தான்.. அவர் வேறுயாருமில்லை இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் தலைவர் சுதா மூர்த்தி தான்
இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவியான சுதா மூர்த்தி, ஒரு கல்வியாளர், எழுத்தாளர் மற்றும் பரோபகாரர் என பன்முகங்களை கொண்டவர். 2006 ஆம் ஆண்டில், சுதா மூர்த்திக்கு இந்திய அரசாங்கம் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.,
மேலும் 2023 ஆம் ஆண்டில், இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த விருதான பத்ம பூஷண் அவருக்கு வழங்கப்பட்டது. சுதா மூர்த்தியின் நிகர மதிப்பு சுமார் ரூ.755 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது, மேலும் அவர் ஆண்டுக்கு ரூ.300 கோடி சம்பாதிப்பதாக கூறப்படுகிறது,
N. R. Narayana Murthy
ஆனால் மற்ற பணக்கார பெண்மணிகளைப் போலல்லாமல், சுதா மூர்த்தி மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.. கடந்த 30 ஆண்டுகளில் ஒரு புதிய புடவை கூட அவர் வாங்கவில்லை என்று சொன்னால் நம்ப முடிகிறதா. ஆம். சராசரி சம்பளம் வாங்கும் பெண்களே வாரத்திற்கு ஒரு புடவை என வாங்கிக்குவித்து வரும் நிலையில், இத்தனை கோடி சொத்துக்களை கொண்ட 30 ஆண்டுகளில் ஒரு புதிய புடவை கூட வாங்கவில்லை என்பது ஆச்சர்யமான விஷயம் தான்.
சுதா மூர்த்தியே இதுகுறித்து ஒருமுறை பேசியிருந்தார். அந்த பேட்டியில் “நான் புனித நீராடுவதற்காக காசியில் இருந்தேன், பொதுவாக காசிக்குச் செல்லும்போது உங்களுக்கு மிகவும் பிடித்த ஒரு பழக்கத்தை விட்டுவிட வேண்டும். அப்போது இனி புதிய புடவைகளை வாங்க கூடாது என்று முடிவெடுத்தேன். அப்போது முதலே புதிய புடவைகளை வாங்குவதை கைவிட்டுவிட்டேன். நான் இப்போது அத்தியாவசிய பொருட்களை மட்டுமே வாங்குகிறேன், ”என்று தெரிவித்தார்.
மேலும் தனது கணவர் நாராயண மூர்த்தியும் தனது கருத்தை ஏற்றுக்கொண்டதாகவும், அவரும் எளிமையான ரசனையுள்ள மனிதர் என்றும் சுதா மூர்த்தி கூறியிருந்தார். தனது சகோதரிகள், நெருங்கிய நண்பர்கள் மற்றும் அவர் தொடர்புடைய தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் பரிசளிக்கப்பட்ட புடவைகளை சுதா மூர்த்தி அணிகிறார். இருப்பினும் சுதாவும் நாராயண மூர்த்தியும் கணிசமான அளவு பணத்தை புத்தகங்களுக்காக செலவிடுகிறார்கள். இந்த ஜோடி 20,000 க்கும் மேற்பட்ட புத்தகங்களை சேகரித்துள்ளது.
N R Narayana Murthy and Sudha Murthy
சுதா மூர்த்தியின் கணவர் நாராயண மூர்த்தியின் நிகர மதிப்பு 4.4 பில்லியன் டாலர் (சுமார் ரூ.36,690 கோடி) என ஃபோர்ப்ஸ் மதிப்பிட்டுள்ளது . இந்த தம்பதிக்கு அக்ஷதா மூர்த்தி, ரோஹன் மூர்த்தி என 2 பிள்ளைகள் உள்ளனர். சுதா மூர்த்தியின் மகள் அக்ஷதா, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை மணந்துள்ளார். தனது கணவரை வெற்றிகரமான தொழிலதிபராக மாற்றியபோது, தனது மகள் ஒருபடி மேலே சென்று கணவரை பிரதமராக்கியதாக சுதா விளையாட்டாக கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.