தமிழ் சினிமாவின் தலைமைச் செயலகமாக இருந்த ‘அன்னை இல்லம்’! சிவாஜி வீட்டின் பிரம்மிக்க வைக்கும் வரலாறு!

Published : Mar 06, 2025, 08:55 AM IST

சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை கோர்ட் ஜப்தி செய்ய உத்தரவிட்டுள்ள நிலையில், அந்த வீட்டின் பிரம்மிக்க வைக்கும் வரலாற்று பின்னணியை பார்க்கலாம்.

PREV
16
தமிழ் சினிமாவின் தலைமைச் செயலகமாக இருந்த ‘அன்னை இல்லம்’! சிவாஜி வீட்டின் பிரம்மிக்க வைக்கும் வரலாறு!

Sivaji Ganesan Annai Illam : சிவாஜி கணேசன் பேரன் துஷ்யந்த் வாங்கிய கடனுக்காக நடிகர் திலகத்தின் அன்னை இல்லத்தை ஜப்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜகஜால கில்லாடி படத்திற்காக வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 9 கோடி கடனுக்காக பல நூறு கோடி மதிப்புள்ள அன்னை இல்லத்தை ஜப்தி செய்வதா என சிவாஜியின் ரசிகர்கள் ஆதங்கத்தை கொட்டி வருகின்றனர். அந்த அன்னை இல்லத்தில் அப்படி என்ன ஸ்பெஷல் என்பதை பற்றி பார்க்கலாம்.

26
Sivaji House

சென்னையில் எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டம், கலைஞரின் கோபாலபுரம் வீடு, ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு ஆகியவற்றிற்கு நிகராக பேமஸாக இருந்தது தான் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம். ஆரம்பத்தில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள பெசண்ட் காலனியில் வசித்து வந்த சிவாஜி, பின்னர் அந்த வீட்டிற்கு பின்புறமே இன்னொரு வீடு மாறினார். அந்த வீடும் செட் ஆகாததால் சென்னை தியாகராய நகர், தெற்கு போக் சாலையில் உள்ள ஒரு அரண்மனை போன்ற வீட்டை தன் தந்தையின் பெயரில் வாங்கி, அதற்கு அன்னை இல்லம் என பெயரிட்டார்.

36
Sivaji Family

சுமார் ஒன்றரை ஏக்கர் அளவில் கட்டப்பட்ட அந்த இல்லம் கிட்டத்தட்ட ஒரு குட்டி வெள்ளை மாளிகை போல இருக்கும். பலராலும் வியந்து பார்க்கப்பட்ட இந்த அன்னை இல்லத்தை சிவாஜி கணேசன் வாங்கும் முன்னர், இந்திய அரசின் ஐசிஎஸ் அதிகாரியாக இருந்த ஜார்ஜ் போக், என்பவருக்கு சொந்தமான வீடாக இது இருந்தது. இவர் 1921-ம் ஆண்டு ஆங்கிலேயே அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையராக இருந்தவர். இதுமட்டுமின்றி தலைமை செயலாளராகவும், ஒடிசா மாநில கவர்னரகாவும் பதவி வகித்திருக்கிறார். இதனால் தான் இந்த வீடு இருக்கும் தெரு தெற்கு போக் ரோடு என அழைக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்... Breaking : சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு

46
Sivaji Annai Illam

பின்னர் சர் குர்மா வெங்கட ரெட்டி நாயுடு என்பவர் இந்த வீட்டை சொந்தமாக வாங்கினார். இவர் சென்னை மாகாண செயல் கவர்னராகவும் இருந்துள்ளார். இதையடுத்து 1950ல் மூக்குப்பொடி கம்பெனி நடத்தி வந்த இஸ்லாமியர் ஒருவர் இந்த வீட்டை வாங்கி இருக்கிறார். அவரிடம் இருந்து 1959-ம் ஆண்டு தனது தந்தையின் பெயரில் இந்த வீட்டை வாங்கி இருக்கிறார் சிவாஜி கணேசன். வீட்டை வாங்கிய கையோடு அதன் இண்டீரியர் வேலைகள் மட்டும் 2 ஆண்டுகளுக்கு நடந்ததாம். குறிப்பாக தேக்கு மரங்களால் அழகிய இண்டீரியர் பணிகளை செய்தாராம் சிவாஜி.

56
Sivaji House details

செவாலியே விருது வாங்கியதை பாராட்டும் விதமாக செவாலியே சிவாஜி கணேசன் சாலை என இந்த வீடு உள்ள பகுதி பெயர் மாற்றம் செய்யப்பட்டது. சிவாஜி நடித்த சில படங்களின் படப்பிடிப்புகளும் இந்த அன்னை இல்லத்தில் நடந்துள்ளன. இந்த வீட்டிற்கு பல்வேறு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் வருகை தந்திருக்கிறார்கள். சிவாஜி ஜனதா தள கட்சியின் தமிழ் மாநில தலைவராக இருந்தபோது இவரைப்பார்க்க அப்போதைய பிரதமர் விபி சிங் இந்த அன்னை இல்லத்திற்கு வந்திருக்கிறார்.

66
Sivaji House interior

சிவாஜி தனது பிறந்தநாளன்று காமராஜரை நேரில் சந்தித்து வாழ்த்து பெறுவது வழக்கம், ஆனால் 1975-ம் ஆண்டு அக்டோபர் 1ந் தேதி சிவாஜியின் பிறந்தநாள் அன்று அவரை வாழ்த்த காமராஜரே அன்னை இல்லத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்திருக்கிறார். சிவாஜியை வாழ்த்திவிட்டு சென்ற மறுதினமே காமராஜர் காலமானார். இப்போதும் சிவாஜியின் மகன்கள் ராம்குமார், பிரபு, நடிகர் திலகத்தின் பேரன் விக்ரம் பிரபு கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறார்கள். காமராஜர், விபி சிங், எம்ஜிஆர் வரை வந்து உணவு சாப்பிட்டு சென்ற பெருமை கொண்டது அன்னை இல்லம். 

அதுமட்டுமின்றி யானை தந்தங்கள், சிவாஜி வேட்டையாடிய புலியின் தோல் என பல ஆச்சர்யங்கள் நிறைந்த வீடாக இந்த அன்னை இல்லம் இருந்து வருகிறது. இப்படி பல்வேறு பெருமைகளை கொண்ட அன்னை இல்லத்தை தான் தற்போது ஜப்தி செய்ய உத்தரவிட்டிருக்கிறது நீதிமன்றம். சிவாஜி சென்னை மற்றும் தஞ்சாவூரில் வாங்கிக் குவித்து வைத்திருந்த சொத்துக்கள் பல ஏற்கனவே விற்கப்பட்டுவிட்டன. குறிப்பாக தஞ்சாவூரில் சிவாஜிக்கு சொந்தமான சாந்தி கமலா தியேட்டர் மற்றும் பல சொத்துக்கள் விற்கப்பட்டுவிட்டன. அந்த வரிசையில் இந்த ஜப்தி அறிவிப்பால் சிவாஜியின் அன்னை இல்லமும் பறிபோய்விடுமோ என்கிற அச்சம் சிவாஜி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. அதை அரசே கைப்பற்றி நினைவில்லம் ஆக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது. 

இதையும் படியுங்கள்...   பிரபுவின் பெயரில் வீடு இருக்கிறது – ஜப்தி உத்தரவை ரத்து செய்ய ராம்குமார் கோரிக்கை!

Read more Photos on
click me!

Recommended Stories