
நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஷங்கர். இவர் ஜெண்டில்மேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக காலடி எடுத்து வைத்தார். குஞ்சுமோன் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவான இப்படம் இட ஒதுக்கீடு பிரச்சனையை பேசியது. ஷங்கரின் முதல் படமே அரசியல் வீரியம் கொண்ட படமாக இருந்தாலும் அடுத்ததாக காதலன் படத்தில் தான் ஒரு கமர்ஷியல் இயக்குனர் என்கிற முத்திரையை பதித்தார்.
பின்னர் மீண்டும் அரசியல் ரூட்டுக்கு திரும்பிய அவர், இந்தியன் படம் மூலம் எப்படியெல்லாம் ஊழல் நடக்கிறது என்பதை வெளிச்சம் போட்டு காட்டினார். இப்படத்தின் வெற்றிக்கு ஷங்கர் மட்டும் காரணமல்ல, அவருக்கு பக்கபலமாக இருந்த எழுத்தாளர் சுஜாதாவும் ஒரு காரணம். இந்தியன் படத்தின் மூலம் தான் எழுத்தாளர் சுஜாதா உடன் ஷங்கர் நெருக்கமானார். இந்தக் கூட்டணியில் அடுத்தடுத்து வெளிவந்த படங்கள் ஒவ்வொன்றும் மாஸ்டர் பீஸ் ரகம் தான்.
சுஜாதாவும் ஷங்கரும் இணைந்து இந்தியன், முதல்வன், பாய்ஸ், அந்நியன், சிவாஜி தி பாஸ், எந்திரன் ஆகிய படங்களில் பணியாற்றினர். இந்த படங்களுக்கெல்லாம் டயலாக் எழுதியது சுஜாதா தான். இதனால் ஷங்கரின் படங்களுக்கு முதுகெலும்பாக சுஜாதா திகழ்ந்து வந்தார். சுஜாதா கடந்த 2008-ம் ஆண்டு காலமான பின்னர் ஷங்கரின் சரிவு ஆரம்பித்தது. சுஜாதா மறைவுக்கு பின்னர் ஷங்கர் இயக்கிய படங்களில் நண்பன் படம் மட்டுமே குறிப்பிடத்தக்க வெற்றியை பதிவு செய்தது. அதுவும் 3 இடியட்ஸ் என்கிற பாலிவுட் படத்தின் ரீமேக் ஆகும்.
இதையும் படியுங்கள்... ஷங்கர் இப்படி ஏமாத்திட்டாரே! கேம் சேஞ்சர் படம் பார்த்து புலம்பும் ரசிகர்கள்
நண்பன் படத்துக்கு பின் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாடங்கள் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்த வண்ணம் உள்ளன. கடந்த 2015-ம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளிவந்த ஐ படத்தில் இருந்து கடைசியாக அவர் தமிழில் இயக்கிய இந்தியன் 2 வரை கடந்த 10 ஆண்டுகளில் ஷங்கர் ஒரு ஹிட் கூட கொடுக்க முடியாமல் திண்டாடி வருகிறார். ஐ படம் ஷங்கரின் பிரம்மாண்டத்திற்கு தீனி போடும் படமாக இருந்தாலும் அதன் வசனங்களும் திரைக்கதையும் சொதப்பலாக அமைந்ததால் அப்படத்திற்காக நடிகர் விக்ரம் போட்ட உழைப்பெல்லாம் வீணாய் போனது.
ஐ படத்தை தொடர்ந்து எந்திரன் 2.0 படத்தை இயக்கினார் ஷங்கர். ஷங்கரின் கெரியரில் ஒரு மைல்கல் படமாக எந்திரன் பார்க்கப்பட்டது. அதனால் அதன் இரண்டாம் பாகமும் பிரம்மிக்க வைக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. படத்தில் பிரம்மாண்டத்தை தவிர வேறெதுவுமில்லை. 800 கோடி வசூலித்தும் இப்படம் விநியோகஸ்தர்களுக்கு லாபத்தை கொடுக்கவில்லை. 2.0 படத்திற்கு பின் 6 ஆண்டுகள் கடினமாக உழைத்து ஷங்கர் இயக்கிய படம் இந்தியன் 2.
இந்தியன் முதல் பாகம் அளவுக்கு இந்தியன் 2 படமும் ஊழலுக்கு எதிரான அரசியலை பேசும் என பில்டப் கொடுத்தார்கள். ஆனால் கடைசியில் கிரிஞ்ச் படமாக மாறி, மீம் கிரியேட்டர்களின் டெம்பிளேட்டாக இந்தியன் தாத்தா ஆகிவிட்டார். இப்படி ஷங்கரின் கெரியர் சரிவை சந்தித்ததற்கு சுஜாதா எனும் ஆளுமை அவர் வசம் இல்லாததே காரணமாக கூறப்படுகிறது. தற்போது கேம் சேஞ்சர் ஷங்கருக்கு கம்பேக் படமாக அமையுமா என்பதை அதன் வசூல் தான் தீர்மானிக்கும்.
இதையும் படியுங்கள்... ஷங்கர் கம்பேக் கொடுத்தாரா? கடுப்பேற்றினாரா? கேம் சேஞ்சர் விமர்சனம் இதோ