
நடிகர் நெப்போலியன் மகன் தனுஷுக்கு தசைச்சிதைவு பாதிப்பு உள்ளது. இதன் காரணமாக 10 வயதில் இருந்தே அவரால் நடக்க முடியாமல் போனது. இருப்பினும் ஆயுர்வேத சிகிச்சை மூலம் மகனை காப்பற்றிய நெப்போலியன் அவருக்காக அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். தற்போது 25 வயதாகும் தன் மகன் தனுஷுக்கு திருமண ஏற்பாடுகளை செய்து வருகிறார். தனுஷுக்கு வருகிற நவம்பர் மாதம் திருமணம் நடைபெற உள்ளது.
திருநெல்வேலியை சேர்ந்த பெண்ணுடன் தான் தனுஷுக்கு திருமணம் நடைபெற உள்ளது. இவர்களது திருமணம் ஜப்பானில் நடைபெற உள்ளது. மகனின் திருமணத்திற்காக சுமார் ஒரு மாத கப்பல் பயணத்தின் மூலம் ஜப்பான் சென்றடைந்துள்ளார் நெப்போலியன். தனுஷை விமானத்தில் அழைத்து செல்ல முடியாது. அப்படி அழைத்து சென்றால் அவர் உயிருக்கே ஆபத்து என மருத்துவர்கள் எச்சரித்ததை அடுத்து கப்பல் பயணத்தை தேர்வு செய்திருக்கிறார் நெப்போலியன்.
ஜப்பான் செல்ல வேண்டும் என்பது தனுஷின் 8 வருட கனவாம். அதை ஒரு மாத கப்பல் பயணத்துக்கு பின் நிறைவேற்றி இருக்கிறார் நெப்போலியன். ஜப்பான் சென்றடைந்த தனுஷுக்கு அங்குள்ள நெப்போலியனின் நண்பர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். மேலும் தனது மகனைப் பற்றி விமர்சனம் செய்தவர்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோளை விடுத்து நீண்ட பதிவு ஒன்றையும் போட்டுள்ளார் நெப்போலியன்.
அதில் அவர் கூறியிருப்பதாவது : “அன்பு நண்பர்களே, உலகெங்கும் வாழும் தமிழ்ச் சொந்தங்களே, எங்கள் முத்த மகன் தனுஷின் 8 ஆண்டுகால கனவு ..! இந்தியாவில் பிறந்தாலும் , சூழ்நிலை காரணமாக உலகின் ஒரு கோடியில் இருக்கும் அமெரிக்காவில் வசிக்கும் நாங்கள், மறு கோடியில் இருக்கும் ஜப்பானுக்கு பயணம் செய்ய ஓர் ஆண்டு திட்டமிட்டு , 6 மாத காலமாக செயல்வடிவம் கொடுத்து, ஒரு மாதகாலமாக பயணம் செய்து, உங்கள் அனைவரது வாழ்த்துக்களாலும் ஆசீர்வாதத்தாலும், தனுஷின் ஆசையை நிறைவேற்றி இருக்கிறோம்.
இதையும் படியுங்கள்... 16 வயதிலேயே படைத்த சாதனை.. 25 வருடத்திற்கு முன் எடுத்த Throw Back போட்டோ வெளியிட்டு அசத்திய த்ரிஷா!
எல்லையில்லா மகிழ்ச்சி அவனுக்கு; அளவில்லா மனநிறைவு எங்களுக்கு; சாதித்துவிட்டான். இந்த தருணத்தில் ஒருசில விசயங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். அதுபோல எங்கள் வாழ்க்கையை தவறாக விமர்சிப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோளாக வைக்கிறேன். நம் பெற்றோரின் கனவுகளுக்காகவும், நமது கனவுகளுக்காகவும், நம் பிள்ளைகளின் கனவுகளுக்காகவும் அவசியம் வாழ வேண்டும். வாழ்ந்து பார்க்க வேண்டும்..! கடமையை நிறைவேற்ற வேண்டும்..! வாழ்க்கை ஒருமுறைதான்..! வாழ்ந்துதான் பார்போமே..!
“அரிது அரிது மானிடராய்ப் பிறப்பது அரிது..! “ இந்த உலகிற்கு நாம் வரும்போது எதையும் கொண்டு வரவில்லை. அதுபோல் நாம் இந்த உலகைவிட்டு போகும் போதும் எதையும் கொண்டு போகப்போவதில்லை. “யாதும் ஊரே யாவரும் கேளீர்”;.“தீதும் நன்றும் பிறர்தர வாரா”; “அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்” அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிடத் திரும்பிட ஏக்கங்கள். அவரவர் வாழ்க்கையை அவர்களது மனம்போல் நன்றாக வாழுங்கள். மற்றவரையும் அவர்களது மனம்போல வாழ விடுங்கள்.
யார் மனதையும் புண் படுத்தாதீர்கள். குறை கூறாதீர்கள், பழிக்காதீர்கள், உண்மை தெரியாமல் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் , யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் விமர்சனம் செய்யாதீர்கள்..! உங்களுக்கும் குடும்பம் இருக்கறது என்பதை மறவாதீர்கள். “ஒரு பக்க சொல் ஓர் யானை பலம்” எல்லோரையும் வாழ்த்துக்கள். பிடிக்கவில்லை என்றால் இழிவாக பேசாதீர்கள்..! அது உங்களுக்கே ஒருநாள் திரும்பிவிடும்.
எண்ணம் போல்தான் வாழ்க்கை. நன்றாக எண்ணுங்கள். சிந்தனையை செயல்படுத்துங்கள். உலகை நீங்களும் வெல்லலாம்.. முயன்றால் முடியாதது என்று எதுவுமே இல்லை. வாழுங்கள் …! வாழவிடுங்கள்..! நான் போடுகின்ற ஒவ்வொரு பதிவும், எனது திரையுலகின் நடிப்பையும் நிஜ உலகின் வாழ்க்கையையும் பார்த்து ரசிப்பவர்களுக்கும், எங்களை நேசிப்பவர்களுக்கும், எங்களிடம் அன்பை சுவாசிப்பவர்களுக்கு மட்டும்தான். அனைவருக்கும் கோடனு கோடி நன்றிகள் பல” என நெகிழ்ச்சி உடன் பதிவிட்டு உள்ளார்.
இதையும் படியுங்கள்... Bigg Boss Season 8 : விஜய் சேதுபதி மாஸாக அசத்திய பிக் பாஸ் ப்ரோமோ.. உருவானது எப்படி? வெளியான டக்கர் வீடியோ!