மருதநாயகம் தொடக்கவிழா... இன்னும் பசுமையாக நினைவிருக்கிறது - ராணி எலிசபெத் மறைவுக்கு கமல் இரங்கல்

First Published Sep 9, 2022, 11:57 AM IST

Queen Elizabeth II Death : பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் நேற்று இரவு காலமானார். அவரது மறைவுக்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், ராணி எலிசபெத் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

அதில் அவர் பதிவிட்டுள்ளதாவது : “எழுபதாண்டுகளாக இங்கிலாந்தின் மகாராணியாக திகழ்ந்த இரண்டாம் எலிசபெத் இயற்கை எய்திய செய்தியைக் கேட்டு துயருற்றேன். ஆங்கிலேயர்கள் மட்டுமல்லாது, அகில உலகத்தவரின் நேசத்தையும் பெற்றவராக அவர் விளங்கினார். 25 ஆண்டுகளுக்கு முன்னர் எங்களது அழைப்பை ஏற்று மருதநாயகம் திரைப்படத்தின் தொடக்கவிழாவில் கலந்துகொண்டு வாழ்த்தினார். அனேகமாக அவர் கலந்து கொண்ட ஒரே திரைப்பட படப்பிடிப்பு அதுதான்.

இதையும் படியுங்கள்... Kohinoor Crown : ராணி எலிசபெத்தின் வைர கிரீடத்தை அணியப் போகிறவர் யார்?

5 ஆண்டுகளுக்கு முன்னர்  லண்டனில் நடந்த கலாச்சார நிகழ்வில் அரண்மனையில் அவரை சந்தித்துப் பேசியது இன்னமும் பசுமையாக நினைவிருக்கிறது. தங்கள் பிரியத்திற்குரிய ராணியை இழந்து வாடும் இங்கிலாந்து மக்களுக்கும், அரச குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

ராணி எலிசபெத் கடந்த 1997-ம் ஆண்டு இந்தியா வந்திருந்தபோது, தமிழகத்திற்கு வருகை தந்து அப்போது நடைபெற்ற கமலின் மருதநாயகம் படத்தின் ஷுட்டிங்கின் தொடக்க விழாவில் பங்கேற்றார். அந்த விழாவில் 20 நிமிடங்களுக்கு மேல் பங்கேற்று சிறப்பித்திருந்தார். முன்னாள் முதல்வர் கலைஞரும் அந்த நிகழ்வின் போது உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... Queen Elizabeth: ராணி எலிசபெத் மறைவு!10 நாள் துக்கம் அனுசரிப்பு.. 5 நாட்கள் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதி.!

click me!