ஐடி ரெய்டு...சாக்கு மூட்டையில் கட்டி வைக்கப்பட்ட கட்டு கட்டான பணம் சிக்கியது! அன்பு செழியனுக்கு நெருக்கடி!

First Published Aug 2, 2022, 3:13 PM IST

சினிமா பைனான்ஸியர் அன்புச்செயலுக்கு நெருக்கமானவர் வீட்டில் இருந்து, ரூபாய் 13 கோடி ரொக்கப்பணம் சிக்கியுள்ளது. அன்பு செழியனுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
 

இன்று காலை முதலே, தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பாளர்கள் மற்றும் திரைப்பட விநியோகஸ்தர்கள் வீட்டில் வருமான வரி துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக பிரபல தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான கலைப்புலி தாணுவின் வீடு மற்றும் அலுவலகங்கள், அதே போல் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவுக்கு சொந்தமான இடங்கள், மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் வீடு மற்றும் அலுவலகங்கள் ஆகிய 40க்கும் மேற்பட்ட இடங்களில் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

அன்பு செழியனுக்கு சொந்தமாக சென்னை மற்றும் மதுரையில் உள்ள வீடு அலுவலகங்கள், அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகள், அவரது குடும்ப உறவினர்கள் என 10 க்கும் மேற்பட்ட இடங்களில் தற்போது சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அன்பு செழியனுக்கு நெருக்கமானவர் வீட்டில் இருந்து, சாக்கு மூட்டையில் கட்டி வைக்கப்பட்டிருந்த,  சுமார் 13 கோடி பணம் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது சிக்கியுள்ள இந்த பணம் கணக்கில் வரவு வைக்கப்படாத பணம் என்றும், சினிமா தயாரிப்பு பணிகளுக்காக வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்: செல்வம் பெருக ஆடி பெருக்கு அன்று.. இந்த 5 பொருட்களை கட்டாயம் பூஜையில் வையுங்கள்!
 

இந்த பணத்திற்கான உரிய ஆவணங்களை இன்று மாலைக்குள் அவர்கள் சமர்பிக்காவிட்டால்... ஐடி அதிகாரிகள் பணத்தை கைப்பற்றி அரசிடம் ஒப்படைப்பார்கள் என கூறப்படுகிறது. மேலும் இந்த சோதனை இரண்டு நாட்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கோபுரம் ஃபிலிம்ஸ் என்ற பெயரில் திரைப்பட விநியோக நிறுவனம் நடத்தி வரும் அன்புச் செழியனுக்கு சொந்தமான இடங்களில் ஏற்கனவே 'பிகில்' பட விநியோகம் குறித்து, கடந்த 2020 ஆம் ஆண்டு வருமானவரித்துறையினர் சோதனை நடத்திய பின்னர் இரண்டு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் வருமானவரித்துறையினர் இவரது வீடு மற்றும்  அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள்.

இதுவரை நடத்தி வந்த சோதனையில், மற்ற தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களிடம் இருந்தும் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்ற பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சமீப காலமாக திரைத்துறையில் கருப்பு பணம் அதிகம் பயன்படுத்த படுவதாக வந்த தகவலின் அடிப்படியில் தான் இந்த சோதனையை வருமான வரி அதிகாரிகள் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்: குழந்தையாக தொட்டிலில் தவழும் தளபதி விஜய்..! அதிகம் பார்த்திடாத அரிய புகைப்படங்கள் இதோ..!
 

click me!