ஒரே படம்; 5 பாட்டு; இளையராஜா உள்பட ஒவ்வொரு பாட்டுக்கும் ஒரு இசையமைப்பாளர் - எந்த படம் தெரியுமா?
Ansgar R |
Published : Oct 12, 2024, 05:52 PM IST
Kollywood Cinema : தமிழ் சினிமாவை பொறுத்தவரை பல வினோதமான விஷயங்கள் நடந்திருக்கிறது. அப்படி, ஒரே படத்திற்கு 5 இசை அமைப்பாளர்கள் இசை அமைத்த திரைப்படம் குறித்து இப்போது பார்க்கலாம்.
தமிழ் சினிமாவை பொறுத்தவரை அதில் பணியாற்றும் அனைத்து விதமான கலைஞர்களும் ஏதோ ஒரு வகையில் ஒரு புதிய முயற்சியை தொடர்ச்சியாக எடுத்துக் கொண்டே தான் இருக்கிறார்கள். ஆனால் தொழில்நுட்பம் பெரிய அளவில் வளர்ந்து விட்ட இந்த காலகட்டத்தில் கூட எடுக்காத பல புதிய முயற்சிகளை சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பே இரு இயக்குனர்கள் செய்து காட்டிருக்கிறார்கள். அவர்கள் தான் இயக்குனர்கள் தேவராஜ்-மோகன்.
கடந்த 1973 ஆம் ஆண்டு தமிழில் வெளியான "பொண்ணுக்கு தங்க மனசு" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இவர்கள் தமிழ் திரையுலகில் களமிறங்கினார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் போன்ற நடிகர்கள் இல்லாமல் அதிகபட்சமாக இவர்களுடைய திரைப்படத்தில் சிவகுமார் தான் ஹீரோவாக நடித்திருப்பார். நல்ல பல திரைப்படங்களை எடுத்த இவர்களுடைய இயக்கத்தில் கடந்த 1980ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் "கண்ணில் தெரியும் கதைகள்" என்கின்ற திரைப்படம்.
பிரபல பாடகர் ஏ.எல் ராகுவினுடைய தயாரிப்பில், பிரபல நடிகர் சரத்பாபு, நடிகை ஸ்ரீபிரியா, வடிவக்கரசி, எம். என் ராஜம், செந்தாமரை மற்றும் வெண்ணிறாடை மூர்த்தி உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் அது. இந்த திரைப்படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் இடம் பெற்றிருக்கும். அந்த ஐந்து பாடல்களுக்கும் ஐந்து இசையமைப்பாளர்கள் மற்றும் ஐந்து பாடல் ஆசிரியர்களை கொண்டு வினோதமான முயற்சி ஒன்றை மேற்கொண்டு இருப்பார் இயக்குனர் தேவராஜ் மோகன்.
34
Vaali
இந்த படத்தில் வரும் "நான் ஒரு பொன் ஓவியம்" என்கின்ற பாடல் இன்றளவும் பலருடைய விருப்பமான பட்டியலில் இடம் பெற்றிருக்கும். இந்த பாடலுக்கான வரிகளை எழுதியது புலமைப்பித்தன், இசையமைத்தது இசைஞானி இளையராஜா. அதே போல "நான் உன்னை நினைச்சேனே" என்கின்ற பாடலுக்கு சங்கர் கணேஷ் இசையமைக்க, அந்த பாடலுக்கு வாலிபக் கவிஞர் வாலி வரிகளை எழுதி இருப்பார். இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற மூன்றாவது பாடல் தான் "ஒன்னு ரெண்டு மூணு" என்கின்ற பாடல், இந்த பாடலுக்கு அகத்தியர் இசையமைக்க வாசுகிநாதன் என்பவர் பாடலாசிரியராக பணியாற்றினார்.
மேலும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற "வேட்டைக்காரன்" என்கின்ற பாடலுக்கு கே.வி. மகாதேவன் இசையமைக்க, கண்ணதாசனின் வரிகளில் இந்த பாடல் ஒலித்தது. இறுதியாக "நான் பார்த்த ரதிதேவி" என்கின்ற பாடலுக்கு ஜி.கே வெங்கடேசன் இசையமைக்க, முத்துலிங்கம் அந்த பாடலுக்கு வரிகளை எழுதி அசத்தியிருந்தார்.
44
AL Raghavan
இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.எல் ராகவன் ஒரு மிகச் சிறந்த பின்னணி பாடகர், அது மட்டுமல்லாமல் திரைத்துறையில் தன்னோடு பணியாற்றும் அனைவரோடும் நட்பு பாராட்டக்கூடிய மிகவும் இளகிய மனம் கொண்ட ஒருவர். இவர் தன்னுடைய தயாரிப்பில் வெளியாகும் படத்திற்கு தன்னுடைய மனதிற்கு பிடித்தமான அனைத்து இசையமைப்பாளர்களும் பணியாற்ற வேண்டும் என்று நினைத்து அவர்களிடம் கேட்ட பொழுது, யாரும் எந்தவித தயக்கமும் சொல்லாமல் ஆளுக்கு ஒரு பாடலை இசையமைத்து கொடுத்திருக்கின்றனர். அதேபோல பெரும் பாடல் ஆசிரியர்கள் ஐந்து பேரும் இந்த படத்தில் ஒலித்த ஐந்து பாடல்களுக்கு தங்களுடைய வரிகளை கொடுத்து அசத்தியுள்ளார். உண்மையில் இக்காலத்தை விட பல மடங்கு முதிர்ச்சியோடு பணியாற்றியுள்ளனர் அக்கால சினிமா கலைஞர்கள்.