தமிழ்நாட்டில் பரபரப்பாக பேசப்பட்ட சரவண பவன் ராஜகோபால் - ஜீவஜோதி இடையே நடந்த 18 ஆண்டுகால வழக்கை மையமாக வைத்து தோசா கிங் என்கிற படத்தை இயக்க உள்ளார் ஞானவேல்.
உண்மைக் கதைகளை படமாக எடுத்தால் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கிறது என்பதனால், சமீபகாலமாக அவ்வாறு எடுக்கப்படும் படங்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக பாலிவுட்டில் இவ்வகை படங்களுக்கு தனி மவுசு உண்டு. அந்த வகையில் தற்போது உருவாக உள்ள படம் தான் தோசா கிங்.
தமிழில் ஜெய்பீம் படத்தை இயக்கிய இயக்குனர் டி.ஜெ.ஞானவேல் தான் தோசா கிங் படத்தை இந்தியில் இயக்க உள்ளார். இப்படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் தமிழ்நாட்டில் பரபரப்பாக பேசப்பட்ட சரவண பவன் ராஜகோபால் - ஜீவஜோதி இடையே நடந்த 18 ஆண்டுகால வழக்கை மையமாக வைத்து தான் இப்படத்தை இயக்க உள்ளார் ஞானவேல்
25
தற்போது அந்த வழக்கை பற்றி பார்க்கலாம். உலகப்புகழ் பெற்ற சரவண பவன் என்கிற ஹோட்டலை நடத்தி வந்த ராஜகோபால். ஏற்கனவே இரண்டு திருமணம் செய்துகொண்ட இவர், மூன்றாவதாக ஜீவஜோதி என்கிற பெண்ணை திருமணம் செய்ய ஆசைப்பட்டார். அதற்கு காரணம் அவரது மூட நம்பிக்கை தானாம். ஜீவஜோதியை திருமணம் செய்தால் தான் பெரிய விவிஐபி ஆகிவிடலாம்னு ஜோதிடர்கள் சொன்னதாகவும், அதைக்கேட்டு ராஜகோபால் அந்த முடிவை எடுத்ததாகவும் சொல்லப்படுது.
ஆனால் ராஜகோபாலின் முடிவுக்கு கட்டுப்படாத ஜீவஜோதி, பிரின்ஸ் சாந்தகுமார் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதனால் ஆத்திரமடைந்த ராஜகோபால் ஜீவஜோதியின் கணவரை ஆள்வைத்து கடத்தி, கொலை செய்ததாக 2001-ம் ஆண்டு வழக்கு பதியப்பட்டது. பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் தான் இந்த வழக்கை விசாரித்தது.
2004-ம் ஆண்டு இந்த வழக்கில் தீர்ப்பு வந்தது. அதில் ராஜகோபாலுக்கு மட்டும் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், மற்ற 5 பேருக்கு 9 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து ராஜகோபால் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். 5 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கின் தீர்ப்பை 2009-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியது.
45
அந்த தீர்ப்பு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஏனெனில், ராஜகோபால் தண்டனையை குறைக்க சொல்லி கேட்ட இந்த வழக்கில் அவருக்கு தண்டனையை அதிகரித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து ராஜகோபால் தரப்பு உச்ச நீதிமன்றத்தை நாடியது.
அங்கு 2009-ம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கு 2019-ல் தான் முடிவுக்கு வந்தது. இந்த வழக்கில் இருந்து தப்பிக்க ராஜகோபால் பல்வேறு முயற்சிகளை செய்தார். ஆனால் அவருக்கு 2019-ம் ஆண்டு மார்ச் 29-ந் தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி, சென்னை உயர்நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்து உத்தரவிடப்பட்டது.
55
அதுமட்டுமின்றி 2019-ம் ஆண்டு ஜூலை 7-ந் தேதிக்குள் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ராஜகோபால் தனக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி இருந்தார். அதனை நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து சுயநினைவின்றி படுத்தபடுக்கையாக இருந்தபடி ராஜகோபால் கோர்ட்டில் ஆஜரானார்.
இதையடுத்து அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. இதையடுத்து கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை 18-ந் தேதி ராஜகோபால் உடல்நலக்குறைவால் காலமானார். 18 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் இறுதிவரை சிறைவாசம் அனுபவிக்காமலேயே ராஜகோபால் மரணம் அடைந்தார். இந்த வழக்கின் பின்னணி நடந்த பல்வேறு விஷயங்களை மையமாக வைத்து தான் தோசா கிங் படத்தை எடுக்க உள்ளார் இயக்குனர் ஞானவேல்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.