தஞ்சையில் தொழில் அதிபர் மீது கொலைவெறி தாக்குதல்! வெளியானது CCTV வீடியோ காட்சி...

Sep 19, 2018, 4:43 PM IST

தனியார் மருத்துவமனையை ஏலம் எடுத்தது தொடர்பாக தொழிலதிபர் இளங்கோவன் மீது கொலை முயற்சி நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சை அருளானந்த நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 65). தொழில் அதிபரான இவர், கல்வி நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ராதிகா ராணி. இவர், தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறு டாக்டராக உள்ளார்.

தினமும் காலை நேரத்தில் இளங்கோவன், தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள தனக்கு சொந்தமான இரு சக்கர வாகன விற்பனை மையத்திற்கு வந்து ஷோரூமை பார்த்து விட்டு சென்றார். அப்போது, ஷோரூம் பின்புறம் போர்வெல் போடும் பணியை பார்த்துவிட்டு வீட்டுக்கு செல்வதற்காக காரில் ஏற வந்தார்.

அப்போது, அந்த பகுதியில் நின்ற 4 பேர் கொண்ட கும்பல், இளங்கோவனை சரமாரியாக இரும்பு கம்பியால் தாக்கினர். அரிவாளாலும் வெட்டினர்.
வலி தாங்காமல் இளங்கோவன் சத்தம் போட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஷோரூமில் இருந்த பணியாளர்கள் மற்றும் அங்கு நின்ற பொதுமக்கள் அங்கு ஓடிவந்தனர். 

மக்கள் ஓடி வருவதைப் பார்த்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடி விட்டது. காயம் அடைந்த இளங்கோவனை சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து பதிவு செய்த போலீசார், இளங்கோவனை இரும்பு கம்பியால் தாக்கியும், அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களை தேடி வந்தனர். மேலும், இளங்கோவன் தாக்கப்பட்ட ஷோரூம் சிசிடிவி கேமராவில் பதிவானவற்றை போலீசார் ஆய்வு செய்தனர்.  இளங்கோவனை கொலை செய்ய முயற்சி செய்த கும்பல் திருச்சியை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. 

இளங்கோவன் தாக்கப்பட்டது குறித்து போலீசார் கூறுகையில், தஞ்சை திலகர் திடல் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையை ஏலம் எடுத்தது தொடர்பாக இளங்கோவனை கொலை செய்ய முயற்சி நடந்து இருக்கலாம் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இந்த வழட்ககில் தனியார் மருத்துவமனை உரிமையாளர் பாரதி மோகன் உள்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் போலீசாரால் தேடப்பட்டு வருவதாக கூறினர்.