நேசிப்பாயா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ முரளி குடும்பத்தில் தன் மகளை திருமணம் செய்து வைக்க பயந்ததாக தெரிவித்துள்ளார்.
மறைந்த நடிகர் முரளிக்கு மொத்தம் 3 பிள்ளைகள் உள்ளனர். மூத்த மகள் காவ்யா, இரண்டாவது பிறந்தவர் அதர்வா, மூன்றாவது ஆகாஷ் என்ற மகன் பிறந்தார். இதில் அதர்வா நடிகர் என்பது அனைவருக்கும் தெரியும். அதர்வாவின் தம்பி ஆகாஷ் தன்னுடன் கல்லூரியில் படித்த சினேகா பிரிட்டோ என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் விஜய்யின் மாஸ்டர் உள்ளிட்ட படங்களை தயாரித்த சேவியர் பிரிட்டோவின் மகள் ஆவார்.
இந்த நிலையில் முரளியின் மகனும், நடிகர் அத்ரவாவின் சகோதரருமான ஆகாஷ் முரளி நேசிப்பாயா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். விஷ்ணுவர்தன் இயக்கும் இந்த படத்தில் அதிதி ஷங்கர் ஹீரோயினாக நடிக்க உள்ளார். எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சார்பில் சேவியர் பிரிட்டோ இந்த படத்தை தயாரிக்க உள்ளார். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார்.
அட்வென்ச்சர் காதல் கதையாக உருவாகும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழா நேற்று முன் தினம் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகை நயன்தாரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார்.
இந்த விழாவில் பேசிய தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ “ஒரு சினிமா குடும்பத்தில் என் மகளை திருமணம் செய்து கொடுக்க எனக்கு மிகவும் பயமாக இருந்தது. மிகவும் பயத்துடன் தான் நான் முரளியின் வீட்டிற்கு சென்றேன். ஆனால் அவர்கள் காட்டிய அன்பை பார்த்து வியந்து என் மனைவியிடம், இவர்கள் சினேகாவை நன்றாக பார்த்துக்கொள்வார்கள் என்று சொன்னேன். ஏனெனில் அந்தளவுக்கு அன்பு பாசத்துடன் பழகக்கூடியவர்கள்.” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் “ என் மகள் விசுவல் கம்யூனிகேஷன் முடித்த பின் சிங்கப்பூர் போனார். ஆனால் அங்கு போனதே ஆகாஷை காதலிக்க தான் என்பது பின்னர் தான் தெரிந்தது. சினேகா ஆகாஷை காதலிப்பதை கடைசி வரை என்னிடம் சொல்லவில்லை. எல்லோருக்கும் தெரிந்த பிறகு தான் எனக்கு தெரியும். ஆனால் நான் செல்லமாக வளர்த்த மகள் என்பதால் என் மகளின் விருப்பத்திற்கு நான் தடையாக இருந்ததில்லை.” என்று தெரிவித்தார்.
மேலும் “ ஆகாஷுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது தான் பெரிய கனவு. ஆனால் அவரின் முதல் படமே பெரிய படமாக இருக்க வேண்டும் என்பது என் மகளின் கனவு. முதலில் சின்ன படம் ஏதாவது பண்னட்டும் என்றேன்.. ஆனால் கேட்கவில்லை. மும்பை சென்று விஷ்ணுவர்தனி சந்தித்து பேசி, எப்படியோ இந்த படத்தை இயக்க சம்மதம் வாங்கிவிட்டார். முதல் நாள் விஷ்ணுவர்தன் என் வீட்டிற்கு வந்த போதே அட்வான்ஸையும் வாங்கி கொடுத்துவிட்டார். இந்த படத்தில் ஹீரோவாக அழகாக காட்ட வேண்டும். அந்த படத்தில் ஹீரோவின் முக்கிய அம்சங்களை கொண்டு வர வேண்டும் என்பதால் விஷ்ணு வர்தன் தான் படத்தை இயக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தார்” என்று தெரிவித்தார்.