Vanitha Vijayakumar : பிரபல நடிகை வனிதா விஜயகுமார் இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் உருவாக்கி உள்ள "டீன்ஸ்" திரைப்படத்தில் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்று, தன் மகள் குறித்து பேசியுள்ளார்.
தமிழ் திரையுலகில் "புதிய பாதை" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் பார்த்திபன். தனது முதல் திரைப்படத்திலேயே இரு மாநில விருதுகளையும் ஒரு தேசிய விருதையும் வென்ற மிகச்சிறந்த இயக்குனர் தான் அவர். அவருடைய இயக்கத்தில் வெளியான பல சிறந்த திரைப்படங்கள் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
குறிப்பாக கடந்த சில ஆண்டுகளில் அவருடைய இயக்கத்தில் வெளியான "ஒத்த செருப்பு" மற்றும் "இரவின் நிழல்" ஆகிய இரு திரைப்படங்களும் தொழில்நுட்ப ரீதியாக மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த சூழ்நிலையில் ஒரு சிறுவர்களின் குழுவை வைத்து "டீன்ஸ்" என்ற பெயரில் புதிய திரைப்படம் ஒன்றை பார்த்திபன் இயக்கியிருக்கிறார்.
பிரபல இசையமைப்பாளர் டி. இமான் இசையமைப்பில் இயக்குனர் பார்த்திபனின் பல திரைப்படங்களில் படத்தொகுப்பாளராக பணியாற்றி வந்த சுதர்சன் இந்த திரைப்படத்திற்கும் படத்தொகுப்பு செய்திருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய நடிகை வனிதா விஜயகுமார் பின்வருமாறு கூறியிருக்கிறார்..
என் வாழ்க்கையில் இதற்கு முன்பாக எத்தனையோ படங்களின் ஆடியோ ரிலீஸ் நிகழ்விற்கு சென்றுள்ளேன். ஆனால் இது என் மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒரு ஆடியோ லாஞ்சு. என் மகள் ஜோவிகா இந்த திரைப்படத்தில் நடித்திருந்தால் கூட நான் இவ்வளவு தூரம் சந்தோஷப்பட்டிருக்க மாட்டேன். முதன்முதலில் நான் இயக்குனர் பி வாசு அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றினேன்.
அதன் பிறகு காக்கை சிறகினிலே என்கின்ற திரைப்படத்தில் இயக்குனர் பார்த்திபனோடு நான் உதவி இயக்குனராக பணியாற்றினேன். இன்று என் மகள் ஜோவிகா இந்த டீன்ஸ் திரைப்படத்தில் இயக்குனர் பார்த்திபனோடு உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளது நினைத்து நான் மிகவும் பெருமை அடைகிறேன். என்று மிகவும் மகிழ்ந்து பேசினார்.