What is aatottam? Method and method of us

ஆட்டோட்டம் என்றால் என்ன:

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பரவலாக, அனைத்து கிராமங்களிலும் ஆடுகளை காணலாம். பசுவைப் போல் ஆடுகளின் சாணம், சிறுநீர் மற்றும் பாலும் சிறந்த மதிப்புடையதாகும். ஆடுகளின் பால் மற்றும் கழிவுகளின் மூலம் தயாரிக்கப்படும் உரம் ஆட்டோட்டம் எனப்படும்.

நெல், காய்கறிகள், பருத்தி, மிளகாய், நிலக்கடலை, எள் மற்றும் மலர் செடிகள் ஆகியவற்றிக்கு உபயோகிக்கும் ஆட்டோட்டம், ஒரு சிறந்த வளர்ச்சி ஊக்கியாகும்.

இது செடி வளர்ச்சியை தூண்டுவதுடன், இலைகள் மற்றும் பழப் பிஞ்சுகள் உதிர்வதை தடுத்து, அதிக எடையுள்ள, சுவையான பொருட்களை தரும்.

ஆட்டோட்டம் செய்யும் முறை:

சுமார் ஐந்து கிலோ தூய ஆட்டு புளுக்கை, மூன்று லிட்டர் ஆட்டுச் சிறுநீர், 1.5 கிலோ கிராம் சோயா அல்லது நிலக்கடலை புண்ணாக்கு அல்லது அரைத்த உளுந்து அல்லது பாசிப்பயிர், ஆகியவற்றை ஒர் இரவு தண்ணீரில் ஊரவிடவேண்டும்.

பின்னர் சுமார் இரண்டு லிட்டர் ஆட்டின் பால், தயிர், இளநீர், கள், கரும்புச்சாறு மற்றும் ஒரு டசன் (dozen) பழுத்த வாழைப்பழம் ஆகியவற்றை சேர்க்கவும்.

கள்ளுக்கு பதிலாக 50 கிராம் ஈஸ்ட்டை 2 லிட்டர் சுடு தண்ணீரில் கரைத்து பயன்படுத்தலாம். அதே போல், கரும்புச்சாறுக்கு பதிலாக, 1 கிலோ வெல்லத்தை 2 லிட்டர் தண்ணீரில் கரைத்து பயன்படுத்தலாம்.

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து கூட்டுப் பொருட்களையும் ஒரு பிளாஸ்டிக் உருளை (drum)யில் வைத்து நன்கு கலக்கவும். அதை பதினான்கு நாட்கள் (இரண்டு வாரம்) நிழலில் வைத்து, பின் அக்கலவையை உபயோகிக்கலாம்

கரைசலை கிளரும் முறை:

ஒரு நாளுக்கு இரண்டு முறை, வலது பக்கமாக 50 முறையும், இடது பக்கமாக 50 முறையும் கிளர வேண்டும். பின் அந்த பிளாஸ்டிக் உருளையை (drum) பூச்சிகளோ, புளுக்களே முட்டை இடாதவாறு நல்ல பருத்தித் துணியைக் கொண்டு மூடிவிடவேண்டும்.

இந்த கரைசலை மேற்கண்டவாறு நன்கு கலந்து, முறைபடி பாதுகாத்து வைத்தால் ஆறு மாதங்கள் வரை வைத்து உபயோகிக்கலாம். மேலும், இந்த கரைசல் சற்று அதிகமான அடர்த்தியில் காணப்பட்டால், இளநீர் அல்லது தண்ணீர் சேர்த்து கலக்கி கொள்ளலாம்.

பயன்படுத்தும் முறை

ஒரு ஏக்கர் நிலத்திற்கு, சுமார் இரண்டு லிட்டர் ஆட்டோட்டத்தை 100 லிட்டர் தண்ணீரில் கரைத்து பயிர்களுக்கு தெளிக்கவும். இக்கரைசலை தெளிக்க பயன்படுத்தும் முன், வடிகட்டி விட்டு பின் பயன்படுத்தலாம், இது தெளிப்பானின் ஒட்டைகளில் தடை இல்லாமல் தெளிக்க உதவும். மேலும், நல்ல விளைவு கிடைக்க, பூ பூக்கும் நேரத்திற்கும் காய் பிடிக்கும் நேரத்திற்கும் முன்னதாக பயன்படுத்தவும்.