வாழையில் அக்டோபர் முதல் ஜனவரி வரையிலான மாதங்களில் சிகடோகா இலைப்புள்ளி நோயின் தாக்குதல் அதிக அளவில் காணப்படுகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்நோய் தாக்கிய இலையின் மேற்பகுதியில் வெளிறிய மஞ்சள் அல்லது பச்சை கலந்த மஞ்சள் நிறத்தில் புள்ளிகள் தோன்றி அவை விரைந்து நீள் வடிவத்தில் பழுப்பு நிறமடைகின்றன.

பல புள்ளிகளை ஒன்று சேர்ந்து இலை முழுவதும் பரவுகிறது. பின்பு இலை காய்ந்து சருகாகிறது. இதனால் ஒளிசேர்க்கைப் பாதிக்கப்பட்டு வளர்ச்சி தடைப்படுகிறது.

அதிகம் பாதிக்கப்பட்ட மரத்தில் குலை சிறுக்கும், காய்கள் முதிர்ச்சி அடையாமல் பிஞ்சிலே பழுக்கும் நிலை ஏற்படும்.

இந்நோயைப் பரப்பும் பூஞ்சாணம், மழை, பனித்துளிகள் மற்றும் காற்று மூலம் விரைவில் பரவுகின்றன. நெருக்கமான நடவு மண்ணில் அதிக களைகள், வடிகால் வசதியில்லாத மண், பனி மற்றும் மழைக் காலங்கள் போன்ற சூழ்நிலைகளில் இந்நோய் அதிகமாக பரவுகிறது.

இந்நோயைக் கட்டுப்படுத்த பாதிக்கப்பட்ட இலைகளை வெட்டி அகற்றி தீயிட்டு அழிக்க வேண்டும்.

வாழைத் தோட்டங்களில் நல்ல வடிகால் வசதி செய்ய வேண்டும். களைகளை அவ்வப்போது அகற்ற வேண்டும். தகுந்த இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.

ஒரு மாத இடைவெளியில் காரிபன்டசிம் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் அல்லது மான்கோசெப் 2 கிராம் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீர் அல்லது ஆக்சி குளோரைடு 2.5 கிராமை ஒரு லிட்டர் நீரில் கலந்து ஒட்டும் திரவத்துடன் சேர்த்து இலைகள் நன்று நனையும்படி தெளிக்க வேண்டும்.

இந்த மேலாண்மை முறைகளைக் கடைப்பிடித்தால் இலைப்புள்ளி நோயைக் கட்டுப்படுத்தி அதிக மகசூல் பெறலாம்.