நல்ல சூரிய ஒளி படும், தண்ணீர் தேங்காத இடத்தை செடி நட தேர்வு செய்யுங்க. மண்ணை நல்லா கிளறி, மாட்டுச் சாணம், வேப்பம் புண்ணாக்கு, எலும்புப் பொடி கலந்து பாத்தி கட்டுங்க.
விதைகளை வரிசையாக 4-5 அடி இடைவெளியில் நடலாம். ஒவ்வொரு பாத்தியிலும் 3-4 விதைகள் வரை நடலாம். விதைப்பதற்கு முன் 2-3 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்தால், விதைகள் சீக்கிரம் முளைக்கும்.
செடி வளரத் தொடங்கும் போது, பாத்தியில் பச்சை இலைகள் அல்லது காய்ந்த சருகுகளைப் பயன்படுத்தி மூடாக்கு போடுங்க.
கொடி படர ஆரம்பிக்கும்போது பந்தல் அமைத்துக் கொடுங்க. இல்லைனா கயிறு கட்டி படர விடுங்க. கொடிகள் தரையில் படாமல் இருந்தால், காய்கள் அழுகிப் போவதை தடுக்கலாம்.
செடிக்கு தினமும் தவறாமல் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ஆனால், தண்ணீர் தேங்கி நிற்க கூடாது. காய் பிடிக்கும் நேரத்தில் தண்ணீர் குறைந்தால், வெள்ளரிக்காய் கசப்பு தன்மை அடைய வாய்ப்புள்ளது.
கொடி படரும்போது, புளித்த கடலைப் புண்ணாக்கு, ஜீவாமிர்தம் அல்லது கஞ்சியில் மாட்டுச் சாணத்தைக் கலந்து ஊற்றலாம். இது ஒரு சிறந்த இயற்கை உரம்.
காய் பிடிக்கும் நேரத்தில் செடியின் பாத்தியில் சாம்பலைத் தூவினால், நிறைய பூக்கள் பூத்து, காய்கள் காய்க்கும்.
வெள்ளரி விவசாயத்தில் காய்ப் பூச்சி ஒரு பெரிய வில்லன். காய்கள் சிறியதாக இருக்கும்போதே, பேப்பர் பைகள் அல்லது கவர்களைப் பயன்படுத்தி மூடிப் பாதுகாத்திடுங்க.
இலைப்பேன், வெள்ளை ஈ போன்ற பூச்சிகளைத் தடுக்க, 2% அடர்த்தி கொண்ட வேப்பெண்ணெய்-பூண்டு கரைசல் அல்லது சோப்புக் கரைசலை வாரத்திற்கு ஒரு முறை மாலையில் தெளிக்க வேண்டும்.
செடி பூக்கத் தொடங்கிய 45-50 நாட்களில் முதல் அறுவடை செய்யலாம். அறுவடை செய்ய தாமதமானால், காய்கள் முற்றி கடினமாகிவிடும். அதனால், சரியான பதத்தில் இருக்கும்போதே பறித்துவிடுங்கள்.