Asianet News TamilAsianet News Tamil

சிறந்த மகசூல் தரும் பட்டாணி…

the best-yielding-pea
Author
First Published Jan 10, 2017, 1:20 PM IST


விவசாயிகள் குளிர்காலத்தில் சிறந்த மகசூல் தரும் பட்டாணி பயிரைத் தேர்வு செய்வதன் மூலம் நல்ல பலனைப் பெற முடியும்.

இரகங்கள்:

போனிவில்லி, புளுபேண்டம், அர்கெல், அலாஸ்கா லின்கோலின், அசாத் இரகங்கள் ஏற்றவை.

மண், தட்பவெப்பநிலை:

மணல்சாரியான செம்மண் பூமியிலும், களிமண் நிறைந்த நிலங்களிலும் வளர்ந்தாலும், வடிகால் வசதி கொண்ட பொல பொலப்பான இருபொறை மண் நிலங்களில் நன்கு வளரும். களர், உவர் நிலங்களில் வளராது. பட்டாணி குளிர்காலத்தில் சிறந்த வளர்ச்சியும், மகசூலும் தரவல்லது.

பருவம்:

பிப்ரவரி – மார்ச், அக்டோபர் – நவம்பர் மாதங்கள் பயிரிட ஏற்ற பருவம்.

விதையளவு:

எக்டேருக்கு 100 கிலோ விதை போதும். 40-க்கு 10 செ.மீ. இடைவெளியில் விதைக்க வேண்டும்.

நிலம் தயாரித்தல்:

நிலத்தை 3 அல்லது 4 தடவை மடக்கி உழ வேண்டும். கடைசி உழவில் 20 டன் மக்கிய தொழு உரம் இட்டு உழவேண்டும். பின்பு 45 செ.மீ இடைவெளியில் பார்கள் அமைக்கவேண்டும்.

விதை, விதைப்பு:

விதை மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த விதைக்கும் முன்பு ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் திரம் அல்லது நான்கு கிராம் ட்ரைகோடெர்மா விரிடி கொண்டு விதை நேர்த்தி செய்யவேண்டும். பின்பு 2 கிலோ பாஸ்போ பாக்டீரியத்தை மண்ணுடன் கலக்கவேண்டும்.

பார்களின் பக்கவாட்டில் விதைகளை 34 செமீ ஆழத்தில் ஊன்றவேண்டும். விதைக்கு விதை 10 செமீ இடைவெளி விட்டு விதையை ஊன்றவேண்டும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை:

பார்களின் ஓரங்களில் தழைச்சத்து 60 கிலோ, சாம்பல் சத்து 70 கிலோ கொடுக்கக்கூடிய இரசாயன உரங்களை அடியுரமாக இடவேண்டும்.

நீர் நிர்வாகம்:

விதைத்தவுடன் ஒரு தண்ணீரும், பின்னர் 3 நாள் கழித்து உயிர்த்தண்ணீரும் விடவேண்டும். பின்னர் மண்ணின் தன்மையை அனுசரித்து 5 நாளுக்கு ஒருமுறை தண்ணீர் கட்டவேண்டும். மலைகளில் பயிரிட்டால் பனிக்கட்டி தோன்றும் காலத்தில் நீர் கட்டவேண்டும்.

களை கட்டுப்பாடு, பின்செய்நேர்த்தி:

விதைத்த 15 நாளுக்குப் பின்னர் ஒரு களை எடுக்க வேண்டும். பின்னர் தேவைப்படும்போது களைக்கொத்தி களையெடுத்து, விதைத்த 30ஆவது நாளில் 60 கிலோ தழைச்சத்து கொடுக்கும் உரத்தை மேலுரமாக இடவேண்டும்.

காய் துளைப்பான்:

15 நாளுக்கு ஒருமுறை ஒரு லிட்டருக்கு 12 கிராம் கார்பரைல் 3 முறை தெளிக்கவேண்டும்.

அசுவினி:

மெத்தைல் டெமட்டான் (அல்லது) டைமெத்தோயேட் (அல்லது) பாஸ்போமிடான் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1 மிலி என்ற அளவில் கலந்து தெளிக்கவேண்டும்.

அறுவடை:

விதைத்த 75 நாள் கறிப் பட்டாணியை அறுவடை செய்யலாம். பட்டாணிப் பயிரில் காய்கள் தகுந்தபடி முற்றியதும் அறுவடையைத் தொடங்க வேண்டும். காய்கறிப் பருவம் அதாவது உண்ணும் பருவத்தைக் கடந்துவிட்டால் காய்களின் தரம் குறைந்துவிடும்.

அறுவடையின்போது அதிக வெப்பம் இருந்தாலும் தரம் குறைந்துவிடும். 3 முறை பட்டாணியை அறுவடை செய்யலாம். அறுவடையை காலையிலோ, முற்பகலிலோ செய்யவேண்டும்.

மகசூல்:

எக்டேருக்கு 110 நாளில் 8 முதல் 12 டன்கள் வரை மகசூல் பெறலாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios