How to prepare the land for guava cultivation? Full info inside ...

கொய்யா சாகுபடி

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஏழைகளின் ஆப்பிள்: நாட்டின் மொத்த பரப்பளவில் கொய்யா உற்பத்தியானது 2.5 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. சுமார் 2.27 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இது ஆப்பிள் பழத்துக்கு நிகரான சத்துகளையும், சுவையையும் கொண்டிருப்பதால் “ஏழைகளின் ஆப்பிள்’ எனப்படுகிறது.

மண்வளம், தட்பவெப்பம்: வெப்ப, மித வெப்ப மண்டல பயிரான இது, கடல் மட்டத்திலிருந்து 1,500 மீட்டர் உயரமுள்ள பகுதிகளிலும் வளரும். ஆண்டின் மழையளவு ஆயிரம் மிமீ வரை உள்ள இடங்களில் மரத்தின் வளர்ச்சி நன்றாக இருக்கும். 

இம்மரம் தனது கடினத் தன்மையால் வண்டல் மண்ணிலிருந்து அனைத்து வகையான மண், காலநிலைகளில் சிறந்து வளர்கிறது. மேலும், நல்ல வடிகால் வசதி உடைய நிலங்களில் சாகுபடி செய்யலாம். 

இதற்கு மண்ணின் கார அமிலத்தன்மையானது 4.5 முதல் 7.5 சதம் என்ற அளவில் இருக்க வேண்டும். இளஞ்செடிகள் வறட்சி, குளிர்ச்சியைத் தாங்காது.

ரகங்கள்: 

லக்னோ 49, அலகாபாத் சபேதா, அரிஜா, ஆப்பிள், பனாராசி, அர்கா, மிர்துளா, அர்கா அமுல்யா, சிட்டிடார், ரெட்பிளஸ், சபேத் ஜாம், கோகிர் சபேதா, லலித், ஸ்வேதா போன்ற ரகங்களைப் பயிரிடலாம்.

நிலம் தயார்படுத்துதல்: 

கொய்யா பயிரிட இருக்கும் நிலங்களை 2 முதல் 4 முறை உழுது 0.6 மீட்டர் ஆழம், அகலம் என்ற அளவில் குழி தோண்டி மேல் மண்ணுடன் 20 கிலோ தொழுஉரம், 500 கிராம் சூப்பர் பாஸ்பேட் கொண்டு நிரப்ப வேண்டும். கன்றுகளை குழி நடுவே நட்டு மண்ணால் அணைக்க வேண்டும். பருவமழை தொடங்கும்போது நட வேண்டும்.

அடர்த்தி நடவு: 

நிலத்தின் தன்மை, மண்வளம், நடவுமுறை பொறுத்து ஏக்கருக்கு 112 செடிவரை நடலாம். எனினும், இது பொதுவாக 3.6 மீட்டரிலிருந்து 5.4 மீட்டர் இடைவெளியில் நடப்படுகிறது. இதில் பழத்தின் எடை, அளவு குறைவாக இருந்தாலும் ஒரு மரத்தின் பழங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

நீர் மேலாண்மை: 

பொதுவாக, கொய்யா மரங்களுக்கு நீர்ப் பாசனம் தேவையில்லை. ஆனால், தொடக்க நிலையில் இளஞ்செடிகளுக்கு ஓராண்டுக்கு 8 முதல் 10 முறை நீர்ப்பாசனம் அவசியம். முழு வளர்ச்சி தாங்கிய மரங்களுக்கு மே, ஜூலையில் வாராந்திர இடைவெளியில் நீர்ப் பாய்ச்ச வேண்டும். சொட்டு நீர்ப் பாசனம் மூலம் 60 சதவீதம் தண்ணீர் சேமிப்பதுடன் பழத்தின் எடை, அளவு கணிசமாக அதிகரிக்கும்.