Here are the techniques that help control the diseases of cinnamon.

தென்னையை குருத்தழுகல், சாறு வடிதல், தஞ்சாவூர் வாடல் நோய், இலைக்கருகல், இலைப்புள்ளி ஆகியவை தாக்கும். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இவற்றைக் கட்டுப்படுத்த பயன்படும் ரசாயனக் கொல்லிகள் பெரியளவில் தீங்கு ஏற்படுத்தக் கூடியவை. 

அவற்றைப் பயன்படுத்துவதால் சுற்றுச்சுழல் மாசுபாடு, நோய்க் காரணிகளுக்கு எதிர்ப்புச்சக்தி அதிகரிப்பு, உணவுப் பொருள்களில் நச்சுத்தன்மை, உயிரினங்களுக்கு தீங்கு போன்றவை ஏற்படுகின்றன. ஆனால், உயிர் எதிர்கொல்லிகளைப் பயன்படுத்துவதால் இத்தகைய தீங்குகள் ஏற்படுவதில்லை. 

இந்த முறையைக் கையாளும்போது சூடோமோனஸ் புளுரசன்ஸ் என்ற நன்மை தரக்கூடிய பாக்டீரியாவும், டிரைக்கோடெர்மா விரிடி என்ற நன்மை தரக்கூடிய பூஞ்சாணமும் சிறப்பாகச் செயல்பட்டு தென்னையைத் தாக்கும் பல நோய்களைக் கட்டுப்படுத்துகின்றன.

மேலும் இவை நீடித்த நன்மை தருவதோடு, தென்னை மரத்தின் நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்கின்றன.

ஆண்டுக்கு 5 கிலோ வேப்பம்புண்ணாக்கு, 50 கிலோ மக்கிய சாண எருவுடன், 200 கிராம் சூடோமோனஸ் புளுரசன்ஸ் பொடியை கலந்து மண்ணில் இடுவதால் குருத்தழுகல், இலைக்கருகல் ஆகிய நோய்களின் தாக்குதலைக் குறைக்கலாம்.

ஒரு மரத்திற்கு 100 கிராம் சூடோமோனஸ் புளுரசன்ஸ், 100 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி, 10 கிலோ தொழுவுரம் ஆகியவற்றை கலந்து 6 மாதத்திற்கு ஒரு முறை மண்ணில் இடுவதால் தஞ்சாவூர் வாடல் நோய், சாறு வடிதல் நோய் ஆகியவை தாக்காமல் தென்னை மரத்தைப் பாதுகாக்கலாம்.