Asianet News TamilAsianet News Tamil

நெற்பயிர்களோடு மீன் வளர்க்கும் முறை பற்றி கேள்விப்பட்டதுண்டா?

Have you heard about fish farming with paddy fields
Have you heard about fish farming with paddy fields?
Author
First Published Feb 28, 2018, 12:31 PM IST


நெற்பயிர்களோடு மீன் வளர்க்கும் முறை

** நெல் வயல்களில் நாற்று நட்டது முதல் அறுவடை வரை நெற்பயிரோடு மீன்வளர்த்தல் ஒரு முறை, அறுவடைக்குப் பின் மழைக் காலங்களில் பெருமளவு நீர் வயல்களில் நிரம்புவதால் அவற்றில் மீன் வளர்த்தல் மற்றொரு முறை.

** பொதுவாக வயல்களில் நெல், உளுந்து, கேழ்வரகு என்ற பயிர் சுழற்சியையே நாம் அறிவோம். ஆனால் வெவ்வேறு இடங்களில் சூழ்நிலைக்கேற்ப ஒரு முறை நெல்லும் மறுமுறை மீனும் வளர்த்து நிலத்தையும் நீரையும் முழுமையாகப் பயன்படுத்துதல் ஒரு புதுமுறை சுழற்சி எனலாம்.

** இம்முறை பயிர் – மீன் சுழற்சியால் அதிக பயன் அடைவதோடு பயிர்களை தாக்கும் பூச்சி, புழுக்களையும் களைகளையும் கட்டுப்படுத்தலாம். நெல்வயல்களில் வளரும் மீன்கள் நிலத்தை தொடர்ந்து கிளறிவிடுவதோடு, மீனின் கழிவில் நிறைந்துள்ள தழைச்சத்து பயிர்களுக்கு தொடர்ந்து கிடைக்கின்றது.

** நெல்மணியோடு விலை குறைந்த, புரதம் நிறைந்த மீனும் கிடைப்பதால் புரதப்பற்றாக்குறை நீங்குகிறது. நெல்லையும் மீனையும் சேர்த்து வளர்க்க, விளையும் வயல்களில் குறைந்தது நான்கைந்து மாதங்களாவது நீர் தேங்கியிருக்க வேண்டும்.

** இவ்வகை வயல்களின் வரப்புகள் உறுதியாகவும் உயரமாகவும் இருப்பது அவசியம். வயலின் பள்ளமான பகுதிகளில் ஆழமான குளங்களும் அவற்றிலிருந்து பிரிந்து செல்லும் பல வாய்க்கால்களும் அமைத்தால் வயலின் நீர் குறைந்து தரைமட்டத்தை அடையும் காலங்களில் மீன்கள் மடிந்துபோகாமல் வாய்க்கால்கள் வழியாக குளத்தை வந்தடைந்து பிழைக்கக்கூடும்.

** வாய்க்கால்கள் 50 செ.மீ. அகலமும், 30 செ.மீ. ஆழமும் கொண்டதாய் இருக்க வேண்டும். வயலுக்கு நீர் பாய்ச்சும் வழியின் மூலமாகவும், வெளியேறும் வழி மூலமாகவும் மீன்கள் தப்பிச்செல்வதை தடுக்க வலைகளைப் பொருத்த வேண்டும்.

** மேற்கூறிய வசதிகளைக் கொண்ட வயல்களில் உறுதியான வேர்களுடன் குறைந்த வெப்பத்தையும் தேங்கி நிற்கும் நீரையும் தாங்கக்கூடிய காலப்பயிர்களை பயிரிடலாம். நெற்பயிரின் நடவுக்குப் பின் விரலளவு மீன் அல்லது அதற்கு மேல் வளர்ந்த மீன்களை நெல்வயல்களில் எக்டேருக்கு 2000 வரை இருப்பு செய்யலாம்.

** இத்தகைய பயிர் வகைகளை பயிரிட்டால் நான்கைந்து மாதங்களில் எக்டர் ஒன்றுக்கு 500 கி.கி. மீன்கள் கிடைக்கிறது. இம்முறையில் நெற்பயிர்களுடன் சாதாக்கெண்டை, திலோப்பியா, விரால் போன்ற மீன் இனங்களையும் நன்னீர் இறால்களையும் வளர்த்தெடுக்கலாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios