Fertiliser from waste for gardens



 

ஓர் அடி அகலம் மற்றும் உயரமுள்ள தொட்டியில், சமைக்கப்படாத கழிவுகளைப் போட்டு, புளித்தத் தயிரை தண்ணீரில் கலந்து தெளித்தால் கழிவுகள் மட்க ஆரம்பித்து, ஒரு மாதத்தில் எரு தயாராகி விடும்.

பிளாஸ்டிக் பொருட்கள், அசைவக் கழிவுகளை பயன்படுத்தக் கூடாது. மரங்களிருந்து விழும் இலை மற்றும் தழைகள், பூஜைக்குப் பயன்படுத்திய பூக்கள் என வீட்டில் கிடைக்கும் பெரும்பாலான கழிவுகளையும் பயன்படுத்தலாம்.

ஓர் அடி ஆழம் மற்றும் அகலத்துக்கு குழியைத் தோண்டி, கிடைக்கும் மண்ணை, குழியைச் சுற்றி அணைபோல் கட்ட வேண்டும்.

பிறகு, குழிக்குள் கழிவுகளைப் போடவேண்டும். குழியைச் சுற்றி இருக்கும் மண் மீது வெண்டை, கத்திரி, தக்காளி போன்றவற்றை நடலாம்.

குழியில் கழிவுகளைக் கொட்டி புளித்தத் தயிரைத் தெளித்து வந்தால் போதும். அந்த ஊட்டத்தை எடுத்துக் கொண்டு, செடிகள் வளர்ந்து காய்கள் கிடைத்துவிடும்.

தினமும் கிடைக்கும் கழிவுகளின் அளவுக்கு ஏற்ப, ஒன்றுக்கும் மேற்பட்ட குழிகளை அமைத்துக் கொள்ளலாம்.

ஒரு பாத்திரத்தில் ஒரு கிலோ அளவுக்கு வாழை மற்றும் திராட்சை போன்ற பழங்களின் கழிவுகள் மற்றும் ஒரு கிலோ வெல்லம் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்கி, 5 லிட்டர் தண்ணீரை ஊற்றி பதினைந்து நாட்கள் வைத்துவிட வேண்டும்.

பிறகு, அருமையான டானிக் கிடைக்கும். இதைச் செடிகளுக்குத் தெளித்தால், அருமையாக வளரும்.