Coriander is the most suitable crop in the shortest time ...

கொத்தமல்லி இலைகள் மற்றும் விதைகள், வாசனைப் பொருளாகவும் மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கொத்தமல்லி சாகுபடி மொத்தப் பரப்பில் 93 சதம் மானாவாரியாகப் பயிரிடப்படுகிறது. ஆண்டு முழுவதும் அனைத்து பருவ காலங்களிலும் கொத்தமல்லியை கீரைக்காகச் சாகுபடி செய்யலாம் என்றாலும், தமிழகத்தில் குளிர் காலம் மற்றும் கோடைக்காலம் என்ற இரு பருவங்களில் கொத்தமல்லி பெரும்பாலும் கீரைக்காகப் பயிரிடப்படுகிறது.

குளிர்கால சாகுபடி டிசம்பரில் தொடங்குகிறது. மாசி, பங்குனியில் கோடை சாகுபடி செய்யப்படுகிறது.

கரிசல் மண் நிலங்களில் கொத்தமல்லி பாசனப் பயிராகச் சாகுபடி செய்யப்படுகிறது. விதைத்த 30 நாளில் அறுவடைக்கு வருவதால், குறுகிய காலப் பணப்பயிராக உள்ளது.

இதை ஏக்கர் கணக்கில் ஒரே முறையாகப் பயிரிடாமல், 20 சென்டுகளாகப் பிரித்து 15 நாட்களுக்கு ஒரு முறை விதைத்தால், வருடம் முழுவதும் அறுவடை செய்யலாம். 400 கிராம் எடை கொண்ட ஒரு கட்டு கொத்தமல்லி ரூ.30 முதல் ரூ.40 வரை விற்கப்படுகிறது.

கொத்தமல்லியை பயிரிட்டு குறுகிய காலத்தில் விவசாயிகள் அதிக லாபம் பெறலாம்.

சாகுபடி முறைகள்:

நிலத்தை கட்டிகள் இல்லாமல் நன்றாக உழுது சமன்படுத்திய பின்னர் பாத்திகள் அமைக்க வேண்டும். பாத்திகளின் பாரின் மீது வரிசையாக நேர் கோட்டில் விதைகளைப் போட்டு, மண் போட்டு மூடிவிட வேண்டும்.

பாரின் மேல் நீர் பாய்ச்சி வந்தால் விதைத்த 10-12 நாட்களில் முளைவிடும். நீர் பாய்ச்சிய 10-12 நாட்களில் களைக் கொல்லி (ஆக்சிகோல்ட்) அடிக்க வேண்டும்.

கோடை பட்ட சாகுபடியில் களைக் கொல்லிகள் தேவையில்லை. முளைத்த 20-ம் நாள் 17:17:17 உரம் ஏக்கருக்கு 150 கிலோ இடவேண்டும்.

இலைவழி உரமாக 19:19:19-ஐ 30-வது நாளில் தெளிக்க வேண்டும். விதைத்த 8 நாட்களில் பழுது இல்லாமல் முளைத்து விட்டால், அறுவடையின் போது அனைத்து இலைகளும் ஒரே சீராகவும், அழகிய இலைகளாகவும் இருக்கும்.

பயிர் பாதுகாப்பிற்கு பூச்சிக் கொல்லி மருந்துகள் எச்சரிக்கையுடன் பயன்படுத்தப்பட வேண்டும். முறையாகப் பயிரிட்டால், ஒரு ஏக்கரில் மகசூல் 6 ஆயிரம் கிலோ கொத்தமல்லி தழை கிடைக்கும்.

ஒரு கிலோ விலை ரூ.10 வீதம் கணக்கிட்டால் மொத்த வருவாய் ரூ.60 ஆயிரம். சாகுபடிச் செலவு ரூ.10000 போக லாபம் ரூ.50000 ஆகும்.