இலங்கையில் நிலவும் அசாதாரண சூழல், மக்களின் துன்பங்களைக் களைய உலக நாடுகள் உதவ வேண்டும் என்று ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கையில் நிலவும் அசாதாரண சூழல், மக்களின் துன்பங்களைக் களைய உலக நாடுகள் உதவ வேண்டும் என்று ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையின் பொருளாதாரம் மோசமான கட்டத்தின் விளிம்பில் இருக்கிறது. இலங்கை அரசிடம் அந்நியச் செலாவணி கையிருப்பு இல்லாததால், திவாலாகிவிட்டது. பணவீக்கம் 70 சதவீதத்தை எட்டியதால் சாமானிய மக்கள் வாங்க முடியாத அளவுக்கு உணவுப் பொருட்கள் விலை உயர்ந்துவிட்டது.
இலங்கை அரசின் தவறான, அழிவுக்கு வழிவகுக்கும் பொருளாதாரக் கொள்கையால் மக்கள் ஒருநாள் இரவில் பிச்சைபாத்திரம் ஏந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இலங்கையை தேசத்தை மோசமான பொருளாதாரச் சூழலுக்குத் தள்ளிய அரசுக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.
நாட்டை அழிவுக்குகொண்டு சென்ற ராஜபக்ச குடும்பத்தினர் பதவி விலகக் கோரி மக்கள் கடந்த பி்ப்ரவரி மாதம் முதல் போராடி வருகிறார்கள். ராஜபக்ச குடும்பத்தில் அனைவரும் பதவியிலிருந்து இறங்கிய நிலையில் அதிபர் கோத்தபய மட்டும் விலகவில்லை.

கோத்தபய ராஜபக்ச அதிபர் பதவியிலிருந்து விலகக் கோரி மக்கள் கடந்த சில நாட்களாக தீவிரமாகப் போராடி வருகிறார்கள். இந்நிலையில் இன்று காலைமுதல் அதிபர் மாளிகைமுன் நடந்து வரும் போராட்டம் கட்டுப்பாட்டை மீறியது. போலீஸாரின் தடுப்புகளை மீறி, அதிபர் மாளிகைக்குள் மக்கள் படையெடுத்து கைப்பற்றினர்.

இலங்கையில் மக்கள் போராட்டம் செய்யும் வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன. இலங்கைக்கு சமீபத்தில் சுற்றுப்பயணம் செய்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி விளையாடியது. அங்கு மக்களின் நிலை, மின்வெட்டு, விலைவாசி உயர்வு ஆகியவற்றை ஆஸ்திரேலிய வீரர்கள் கேட்டறிந்தனர்.
இலங்கை மக்கள் அனுபவிக்கும் துன்பத்தைத் துடைக்க உலக நாடுகள் உதவ வேண்டும் என ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாட் கம்மின்ஸ் ட்விட்டரில் பதிவிட்ட வீடியோவில் “கடந்த 10 ஆண்டுகளில் இலங்கை மிகவும் மோசமான மனிதநேயப் பிரச்சினைகளைச் சந்திக்கிறது. சமீபத்தில் இலங்கைப் பயணத்தின் போது, இலங்கை வீரர்கள் கவுசாலா, சதுஜாவிடம் பேசும் போது, அவர்களின் அனுபவத்தில் இலங்கையில் என்ன நடக்கிறது என்பதையும் தெரிந்துகொண்டேன். உங்கள் ஆதரவை யுனெசிப் வாயிலாக அளியுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
