இலங்கை புத்த கோவில் திருவிழாவில்  கட்டாயப்படுத்தப்பட்டு பங்கேற்ற எலும்பும் தோலுமான 70 வயது டிக்கிரி யானை பரிதாபமாக உயிரிழந்தது.

அண்மையில் எலும்பும் தோலுமாக காட்சியளித்த பெண் யானையின் புகைப்படம் ஒன்றை 'Save elephant' என்ற அமைப்பு பேஸ்புக்கில் பதிவிட்டது. அதில் வயது முதிர்ந்த அந்த யானையின் பெயர் டிக்கிரி எனவும், இலங்கையில் உள்ள அந்த யானையின் உடல் நிலை கவலைக்கிடமாக இருந்தும், அதனை அலங்கரித்து அதிகாரிகள் 10 நாள் நடைபெறும் புத்த கோவில் விழாவில் பங்கேற்க வைத்து துன்புறுத்துவதாகவும் பதிவிடப்பட்டிருந்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதனை பார்த்த விலங்கியல் ஆர்வலர்கள் பலரும், கண்டனம் தெரிவித்து பதிவிட்டிருந்தனர். அதனைத்தொடர்ந்து, டிக்கிரி அணிவகுப்பு நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்டதோடு, அதனை அணிவகுப்பில் பங்கேற்க நிர்பந்திக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தவும் இலங்கை வனத்துறை அமைச்சர் ஜான் அமரதுங்கா உத்தரவிட்டிருந்தார்.

இந்த விசாரணை முடிவு இன்னும் வெளியிடப்படாத நிலையில் நேற்று டிக்கிரி யானை உயிரிழந்தது. நலிவுற்று காணப்பட்ட இந்த பெண் யானையின் உடலை உடற்கூராய்வு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. டிக்கிரி உயிரிழந்தது சமூக ஆர்வலகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.