"தமிழக மீனவர்கள் அத்துமீறுவதற்கு இலங்கை மீனவர்களே காரணம்" - ராணுவ தளபதி பகீர் குற்றச்சாட்டு!
இலங்கையின் வடக்கு கடற்பிரதேசத்தில் தமிழக மீனவர்கள் அத்துமீறி மீன்பிடிப்பதற்கு அந்நாட்டு வட பகுதி மீனவர்களே காரணம் என இராணுவத் தளபதி லெப் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்புவில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய அவர், இலங்கையின் வடக்கு பகுதி மீனவர்கள் மீனவர்கள் மீன்பிடி தொழிலை நிறுத்திக் கொண்ட காரணத்தினாலேயே தமிழக மீனவர்கள் வடபகுதி கடலை ஆக்கிரமிக்கின்றனர் என குற்றம் சாட்டினார்.
வடக்கில் தற்போது மிகவும் குறைந்தளவிலான மீனவர்களே மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதாகவும், அவர்கள் வலை வீசி மீன்பிடிப்பவர்களாகவும் உள்ளதால் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.
முன்பெல்லாம் வட பகுதியிலிருந்து மீன்களை ஏற்றிக் கொண்டு ஏராளமான லாரிகள் தென் பகுதி இலங்கைக்கு செல்லும் என்றும் தற்போது அது போன்றதொரு நிலை இல்லாமல் போய்விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் இலங்கையின் தென் பகுதியை சேர்ந்த மீனவர்கள் மட்டுமே கடலுக்குச் சென்று பல நாட்களாக மீன்பிடித்தொழிலில் ஈடுபடுவதாகவும் வடக்கு பகுதி மீனவர்கள் அவ்வாறு கடலுக்குச் சென்று மீன் பிடியில் ஈடுபடுவதில்லையெனவும் தெரிவித்தார்.
இதன் காரணமாகவே தமிழக மீனவர்கள் வடபகுதி கடலை ஆக்கிரமிப்பதாகவும் இலங்கை இராணுவத் தளபதி லெப் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.