China Earthquake : சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; 21 பேர் உயிரிழப்பு!!
சீனாவின் தென்மேற்கில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 21 பேர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவின் மேற்குப்பகுதியில் அமைந்துல்ள சிச்சுவான் மாகாணத்தில் பிற்பகலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் நிகழ்ந்தது. இது 6.8 என ரிக்டர் அளவில் பதிவானது என்று அமெரிக்க புவிவியல் அமைப்பு தெரிவித்துள்ளது. இதை சீனாவின் பூகம்ப கண்காணிப்பு மையமும் உறுதிசெய்துள்ளது.
சிச்சுவான் மாகாணத்தில் உள்ள லூடிங் என்ற நகரை மையமாகக் கொண்டு பூமிக்கு அடியில் 16கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் நிகழ்ந்தது. சிச்சுவான் தலைநகரம் செங்டுவில் இருந்து 180கி.மீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது
சாங்சா மற்றும் ஜியான் நகரைச் சேர்ந்த நெட்டிஸன்கள், சிச்சுவான் நகரம் வரை நிலநடுக்கத்தை உணர்ந்ததாக தெரிவித்துள்ளனர். தற்போது சிச்சுவான் நகரில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால், நகரம் லாக்டவுனில் இருக்கிறது.
முதல் நிலநடுக்கம் நடந்த சில நிமிடங்களில் 2வது நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 4.2என ரிக்டர் அளவில் பதிவானது. இது லூடிங் நகருக்கு அருகே யான் நகரை மையமாக வைத்து நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தினால் இதுவரை 21 பேர் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2013ம் ஆண்டு யான் நகரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 100க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்தனர்.
கடந்த 2008ம் ஆண்டு சிச்சுவான் மாகாணம் வென்சுவான் பகுதியில் 8 என்ற ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர், ஏராளமான மக்கள் காயமடைந்து உடைமைகளை இழந்தனர்.
கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 4 பேர் உயிரிழந்தனர், 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.